பதிவு செய்த நாள்
26 ஜன2021
14:44
புதுடில்லி:புதிதாக வாகனம் வாங்கும்போது, அந்த வாகனத்துக்கான காப்பீட்டுத் தொகையை, வாகனத்தின் விலையுடன் சேர்த்து மொத்தமாக, ஒரே காசோலையாக கொடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இப்படி மொத்தமாக வாங்குவதால், வெளிப்படைத் தன்மை இல்லாமல் போய்விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதனையடுத்து, இவ்விவகாரம் குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தது, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இக் குழுவானது, தன்னுடைய பரிந்துரையில், காப்பீட்டு நிறுவனங்களுக்கும், வாகன விற்பனை நிறுவனங்களுக்கும் தனித் தனியான காசோலைகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இக்குழு, மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போதைய நடைமுறையினால், காப்பீடு கவரேஜ் எவ்வளவு என்பதையோ, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடி சலுகைகள் குறித்தோகூட வாடிக்கையாளர்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை.அத்துடன் காப்பீடுகள் வழங்கும் நிறுவனங்களிடம் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் கூட இருப்பதில்லை.
வாகன விற்பனையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து, காப்பீடுகளை வழங்கும், ‘ வாகன காப்பீட்டு சேவை நிறுவனங்கள்’ காப்பீட்டுக்கான கட்டணத்தை பெற்று, அதை தன்னுடைய கணக்கில் வரவு வைத்துக் கொண்டு, அதன் பின்னரே காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இப்படி அனைத்து விதங்களிலும் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தால், இனி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிரீமியத்தை, நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களின் பெயருக்கு வழங்குமாறு செய்ய வேண்டும்.இவ்வாறு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., குழு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|