பதிவு செய்த நாள்
27 ஜன2021
06:26
மொபைல் போன் செயலிகள் வழியே கடன் வாங்குவோர் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது. சில ஆயிரம் ரூபாய் கடனை வாங்கிவிட்டு, அவர்கள்படும் அவமானங்களுக்கு அளவே இல்லை.
உரிய நேரத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், சொந்தக்காரர்கள், நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் அழைப்புகளும், ‘வாட்ஸ்ஆப்’ செய்திகளும் பறக்கின்றன. ‘ஏமாற்றுப் பேர்வழி’ என, அவதூறுகள் பரப்பப்படுகின்றன.இத்தகைய அவமானத்துக்கு அஞ்சி, சிலர் தற்கொலை செய்துகொண்ட பிறகு தான், ரிசர்வ் வங்கி கண்ணைத் திறந்துள்ளது.
இதுபோன்ற வரைமுறையற்ற, கடன்களை வசூலிக்கும், வசூல் ஏஜெண்டுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, ஒரு குழுவை நியமித்துள்ளது. இவர்கள், ஒரு புதிய ஆலோசனையைத் தெரிவிகின்றனர். ஏற்கெனவே ரிசர்வ் வங்கியும், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பும் சேர்ந்து, ‘தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன்’ என்ற ஒன்றை நிர்வகித்து வருகின்றன.
இது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையில், உடனடியாகப் பணப் பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. இதுபோன்ற ஓர் அமைப்பை, டிஜிட்டல் கடன்காரர்கள் விஷயத்திலும் உருவாக்கலாம் என்று ஆலோசனை சொல்லப்படுகிறது.வங்கி சாரா நிதி நிறுவனங்களும், ‘பின்டெக்’ என்று அழைக்கப்படும், ‘பைனான்சியல் டெக்னாலஜி’ நிறுவனங்களும், இதுபோன்ற டிஜிட்டல் கடன் செயலிகளை நடத்தி வருகின்றன.
இவர்களிடம் உள்ள வசூல் ஏஜெண்டுகளுக்கு, மியூச்சுவல் பண்டு ஏஜெண்டுகளுக்கு உள்ளது போன்று, ஒரு தனித் தேர்வு வைத்து, அவர்களை ஒழுங்குமுறைப்படுத்தலாம் என்ற ஆலோசனையும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் மூக்கைச் சுற்றிக் காதைத் தொடும் விஷயங்கள் என்கிறார்கள் சிலர். பிரச்னை, கடன் கொடுப்பதில் தொடங்குகிறது.
இத்தகைய டிஜிட்டல் கடன்களை வாங்குவது, பெரும்பாலும் நாள் சம்பளம், வாரச் சம்பளம் வாங்கும் எளிய மக்கள் தான். கடன் வழங்குவதற்காக, வங்கிகள் கோரும் அடிப்படை சான்றுகள் இவர்களிடம் இருப்பதில்லை. இதனால் இவர்கள் எல்லோரும், ஆன்லைன் கந்துவட்டிக்காரர்களிடம் போய் சிக்கிக்கொள்கின்றனர். அவை கடன் கொடுத்த பின்னர், கழுத்தில் கத்தியை வைத்துவிடுகின்றன.
ஏழை, எளியவர்களுக்கு அன்றாடப் பணத் தேவை இருக்கிறது. ஒரு காலத்தில் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கைமாத்தாக பணம் வாங்குவர். நகை வைத்திருப்போர் அதை அடமானம் வைப்பர். தற்போது, இவர்கள் எல்லோரும், டிஜிட்டல் கந்துவட்டிக்காரர்களிடம் போய் சிக்கிச் சீரழிகிறார்கள்.
இத்தகைய டிஜிட்டல் வடிவங்களைக் கட்டுப்படுத்துவது என்பது, அடங்க மறுக்கும் காளைக்கு, மூக்கணாங்கயிறு போடுவது போன்றது. எவ்வளவு கயிறு போட்டாலும், அதை அறுத்துக் கொள்ளவே செய்யும்.அரசாங்கமும், வங்கித் துறையும் இத்தகைய தேவையுள்ளோருக்கு எப்படி கடன் வழங்குவது என்று யோசிப்பதே முக்கியம்.
கடனை வசூலிக்கும் ஏஜெண்டுகளை முறைப்படுத்துவதைவிட, கடன் கொடுப்பதற்கான வரையறைகளை மாற்றியமைப்பது எப்படி என்று, இந்திய ரிசர்வ் வங்கி யோசிக்கவேண்டும்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|