பதிவு செய்த நாள்
07 பிப்2021
22:20
மத்திய பட்ஜெட்டில், பி.எப்., தொடர்பான வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது எந்த தரப்பினருக்கு பொருந்தும் என்பது பற்றி ஒரு பார்வை.
பொது பட்ஜெட்டில், வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், வருமான வரி தொடர்பான முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., தொகை வரி விதிப்புக்கு உள்ளாகும் எனும் அறிவிப்பு, இவற்றில் முக்கியமானதாக அமைகிறது. பொதுவாக, முதலீட்டிற்கு வரி விதிப்பு பொருந்தும். முதலீடு மீதான வட்டிக்கும் வரி உண்டு. முதலீட்டை விலக்கிக் கொள்ளும் போதும் வரி உண்டு. பல முதலீடுகளுக்கு, இந்த பிரிவுகளின் கீழ் வரி விலக்கும் பொருந்தும். இந்த மூன்று பிரிவுகளின் கீழும், வரி விலக்கு பெறும் முதலீடுகளில் ஒன்றாக பி.எப்., அமைகிறது.
வரி விதிப்பு
பி.எப்., திட்டத்தில் உறுப்பினர்கள் செலுத்தும் தொகை, அதற்கான வட்டி மற்றும் விலக்கிக் கொள்ளும் தொகை ஆகியவற்றுக்கு வரிச் சலுகை பொருந்தும் என்பதால், ஓய்வு காலத்திற்கு ஏற்ற முதலீடாக அமைகிறது. எனினும், இந்த ஆண்டு பட்ஜெட்டில், பி.எப்., கணக்கில் செலுத்தப்படும் தொகை தொடர்பான வருமான வரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உறுப்பினர்களின் பங்களிப்பு தொகைக்கு, 2.50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வரி விலக்கிற்கு உரியது என்றும், அதற்கு மேற்பட்ட தொகை மீதான வட்டிக்கு வரி பொருந்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, நடுத்தர மக்கள் மத்தியில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த வரி விதிப்பு கணக்கிடப்படும் விதம் தொடர்பான விளக்கம், குழப்பத்தை போக்கும் வகையில் அமைந்துள்ளது. மாத அடிப்படை சம்பளத்தில், 12 சதவீதம் பி.எப்., தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பங்களிப்பு, ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே, அதன் மீதான வட்டிக்கு வரி பொருந்தும். இதன்படி பார்த்தால், அடிப்படை சம்பளமாக, 1.75 லட்சத்திற்கு மேல் பெறுபவர்களுக்கு மட்டுமே வரி விதிப்பு பொருந்தும்.
பாதிப்பு இல்லை
பி.எப்., உறுப்பினர்களின் மாதாந்திர பங்களிப்பு, 20 ஆயிரத்து, 833க்கு மேல் இருந்தால் மட்டுமே, ஆண்டு தொகை 2.50 லட்சத்திற்கு மேல் அமைந்து வரி விதிப்புக்கு உள்ளாகும். எனவே, பெரும்பாலான பி.எப்., உறுப்பினர்கள், இந்த வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. அதிக சம்பளம் பெறுபவர்களை மட்டுமே இது பாதிக்கும். அதிக நிகர மதிப்பு கொண்டவர்கள் மட்டுமே இப்பிரிவில் வருவர் என்றும், இவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பி.எப்., உறுப்பினர்கள் விரும்பினால், தன்னார்வ நோக்கிலான வி.பி.எப்., வசதி மூலம் தங்கள் பங்களிப்பை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த தொகையும் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றாலும், மாதாந்திர பங்களிப்பு மேலே குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் அதிகமானால் மட்டுமே இது பொருந்தும்.அதே போல, பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீடு, இதனுடன் சேர்த்து கணக்கிடப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்கள், கோடிக்கணக்கில் பி.எப்., முதலீடு செய்து, அதற்கு வரி செலுத்தாமல் நிச்சயிக்கப்பட்ட பலனை பெற்று வரும் நிலையில், வரி விதிப்பு என்பது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் எனும் நோக்கிலேயே, இந்த வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|