பதிவு செய்த நாள்
08 பிப்2021
01:26
வங்கி சேவைகள் மீதான வாடிக்கையாளர்களின் புகார்களை தீர்ப்பதற்கான ஒரு புதிய உத்தியை, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனால், வாடிக்கையாளர்கள் குறைகள் தீர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
இந்தியாவில் வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், பி.பி.ஐ., எனப்படும் வங்கியல்லாத, ‘பிரீபெய்டு’ நிதி வழங்குனர்கள் ஆகியோர் நிதிச் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்கள் வழங்கும் சேவைகளில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படலாம்.
மீண்டும் வரவு
உதாரணமாக, ஏ.டி.எம்.,கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது, சில சமயம் வங்கிக் கணக்கில் பணம் மட்டும் கழித்துக் கொள்ளப்பட்டு இருக்கும்; மெஷினில் இருந்து பணம் வந்திருக்காது. கணக்கில் கழித்துக் கொள்ளப்பட்ட பணம், மீண்டும் வரவு வைக்கப்பட வேண்டும். சில சமயங்களில், இந்தப் பணம் குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்ப வராது அல்லது ஏதோ காரணத்தால் தாமதம் ஏற்பட்டது என்றால் என்ன செய்வீர்கள்?
முதலில், வங்கியை அணுகுவீர்கள். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், வங்கிகளின், ‘ஆம்பட்ஸ்மேன்’ என்று சொல்லப்படும் தீர்வாணையருக்குப் புகார் அளிப்பீர்கள். அங்கிருந்து, உங்கள் வங்கியிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உங்கள் குறைக்குப் பரிகாரம் தேடப்படும்.
வழக்குகளுக்கு தீர்வு
இதேபோன்று தான், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத ப்ரீபெய்டு நிதி வழங்குனர்கள் ஆகியோரின் சேவை குறைபாடுகளைச் சொல்லி, தீர்வு காண்பதற்கான இறுதி புகலிடமாக, தீர்வாணையர் இருப்பார்.இந்தியாவில் தற்போது இந்த மூன்று நிதிச் சேவைகளுக்காக, மொத்தம், 22 தீர்வாணையர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எண்ணற்ற வழக்குகள் இங்கே தீர்வு காணப்படுகின்றன.
தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி, எதற்கு மூன்று தனித்தனி தீர்வாணையங்கள் என கருதி, ‘ஒரு நாடு; ஒரு தீர்வாணையம்’ என்ற திட்டத்தை, ஜூன் 2021 முதல் அமல் செய்யப் போகிறது.வங்கித் துறையோ, வங்கியல்லாத நிதி நிறுவனமோ, தனியார் நிதிச் சேவை நிறுவனங்களோ, எந்த ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாக இருந்தாலும், அங்கே பாதிப்புகள் ஏற்பட்டால், அவை அனைத்தையும் தீர்ப்பதற்கான ஒரே முறையீட்டு இடமாக, இந்த ஒற்றைத் தீர்வாணையம் இருக்கும்.
இதுவரை சரி, ஆனால், இதுநாள் வரை தீர்வாணையத்தில் ஏற்படும் குறைபாடுகளும் களையப்படுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.உதாரணமாக, 2018 –-19ல், தீர்வாணையத் தில் தெரிவிக்கப்பட்ட புகார்களில், 52.90 சதவீத புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முறையாகப் புகார் கொடுக்கப்படவில்லை, வரையறைக்கு வெளியேயுள்ள பகுதிகளில் கொடுக்கப்பட்ட புகார்கள், முதலில் வங்கியில் புகார் கொடுக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டுள்ளன.
நிராகரிப்பு
இவை மட்டுமின்றி, புகார் பட்டியலில் இல்லாத புதிய புகார், ஏற்கனவே வங்கித் துறை தீர்வாணையரால் கையாளப்பட்ட வழக்கு, இதர துறைகள் அல்லது முகமைகளால் பரிந்துரைக்கப்பட்ட புகார்கள் அல்லது காலம் கடந்து கொடுக்கப்பட்ட புகார் போன்ற காரணங்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.எந்த வங்கி, எந்த வரையறைக்குள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே பெரிய வேலை. காலதாமதமாக கொடுக்கப்பட்ட புகார் என்பது இன்னொரு பெரிய பிரச்னை.
அதாவது, வங்கி கொடுத்த பதிலில் இருந்து ஓராண்டுக்குள் தீர்வாணையத்துக்குப் போயிருக்க வேண்டும். அதற்கு மேல் போனால், ‘காலம் கடந்துவிட்டது’ என நிராகரிக்கப்படும்.மூன்று தீர்வாணையங்கள் இணைக்கப்பட்டு ஒரே தீர்வாணையமாவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலையில் தீர்வாணையத்தை நோக்கி சாதாரண மக்கள் வருகின்றனர் என்று பார்க்க வேண்டும்.
புறக்கணிக்கக் கூடாது
கீழேயுள்ள வங்கி அமைப்புகளில் தங்கள் குரலுக்கு மதிப்பில்லை, தங்கள் நியாயத்துக்கு நாதியில்லை என்ற நிலையில் தானே, மேலே வருகின்றனர். அங்கே, பிரச்னைகளுக்குப் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமே தவிர, அதை நிராகரிப்பதற்கான காரணங்கள் அடுக்கப்படக் கூடாது.புகாரில் நியாயம் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டுமேயன்றி, ‘இது எங்க ஏரியா இல்லை; உள்ளே வராதே’ என்றெல்லாம் புறக்கணிக்கக் கூடாது.கொரோனாவுக்குப்பின், பொதுமக்கள் வங்கித் துறை சேவைகளால் மனம் நொந்து போயுள்ளனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாமல், ஆறுதல் ஒத்தடம் கொடுப்பதாக இருக்க வேண்டும், ‘ஒரு நாடு; ஒரு தீர்வாணையம்’ எனும் முயற்சி.ஆர்.வெங்கடேஷ்pattamvenkatesh@gmail.com98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|