பதிவு செய்த நாள்
14 பிப்2021
22:24
டிஜிட்டல் கடன் செயலிகளின் பெருங்கொள்ளை, தென் மாநிலங்களை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கிறது.
உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், டிஜிட்டல் கடன் செயலிகள் வாயிலாக, உடனே கடன் வாங்கிவிடலாம். ஆனால் அதன் பிறகு, இந்த ஆன்லைன் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி, உங்கள் வாழ்க்கையும், நிம்மதியும் சின்னாபின்னமாகி விடும்.
தற்கொலை
இதுவரை சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில், கடன் செயலிகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பலர் தற்கொலை செய்துள்ளனர்.வெறும், 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியவர்கள், 2 லட்சம், 3 லட்சம் ரூபாய் என பணத்தைத் திருப்பிச் செலுத்தி உள்ளனர். இன்னும் சிலரோ, மனைவியின் நகை நட்டு எல்லாவற்றையும் அடகு வைத்தும், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், பராரியாகத் தவிக்கின்றனர்.
புகார்
ஐதராபாதில் மட்டும், 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக தெரிவிக்கிறது, அந்த மாநகர காவல் துறை. மற்ற நகரங்களில் இதன் வீச்சு எவ்வளவு மோசமாக இருக்கவேண்டும் என்று பாருங்கள்.கடந்த ஆண்டு டிசம்பர்மாதம் முதல், கடன் செயலிகளின் கோரத்தாண்டவச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவை தடுக்கப்படாமல் இன்னும்தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர். இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் இதுபோன்று டிஜிட்டல் கடன்களை வழங்குகின்றன என்ற தகவல், கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்திடம் இல்லை என்று பெரிய குண்டைத் துாக்கிப் போட்டிருக்கிறார்.மேலும், இதுபோன்ற செயலிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கிக்கு, 1,509 புகார் வந்துள்ளன.
எப்படி புரிந்துகொள்வது?
வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கடன் செயலிகள் தொடர்பான புகார்களாக இருந்தால், அவை என்.பி.எப்.சி., தீர்வாணையருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ரிசர்வ் வங்கி அல்லது கம்பெனி பதிவாளரிடம் பதிவு செய்யப்படாத நிறுவனங்களாக இருந்தால், புகார் அளிப்பவரிடம் இருந்து அந்தக் கடன் பத்திரத்தின் பிரதியைப் பெற்று, அதை, அந்தந்த மாநில பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், டிஜிட்டல் சேவைகள், பரிவர்த்தனைகள் தொடர்பான கொள்கையை வகுப்பதற் காக, 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அறிக்கை வந்தவுடன், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய கடன் செயலிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்திஇருக்கிறோம் என்றும்தெரிவித்துள்ளார், அவர்.
ஜான் போய், முழம் போய், தற்போது தலைக்கு மேல் வெள்ளம் போய்க்கொண்டு இருக்கிறது. அரசிடம் லகான் இருக்கும்போது, அதை இன்னும் இழுத்துப் பிடிக்காமல் இருப்பதை எப்படி புரிந்துகொள்வது?
இந்த டிஜிட்டல் கடன் செயலிகள் எல்லாம், வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்துக்கொண்டு தான் இத்தனை பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன.வங்கி மேலாளர்களில் ஒருவர்கூட, இந்நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து ஏன் சந்தேகம் கொள்ளவில்லை? நிறுவனங்களாகக் கூட பதிவு செய்துகொள்ளாமல், ஈட்டும் லாபத்துக்கு வரியும் கட்டாமல், அரசாங்கத்தை இவை ஏய்த்து வருகின்றன. வருமான வரித் துறையின் பார்வைக்கு ஒரு நிறுவனம் கூட ஏன் வரவில்லை? வந்திருந்தால், இதுபோன்ற முறையற்ற கடன் செயலிகளோடு தொடர்புடைய வங்கி கணக்குகளை உடனே தடைசெய்திருக்க முடியுமே? அவை செயல்பட முடியாமல் முடக்கி இருக்கலாமே!
கட்டுப்பாடு
இன்னொருபுறம், கூகுள் நிறுவனம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இத்தகைய, 100 கடன் செயலிகளை, ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது. செயலிகள் இல்லாமல் இந்த நிறுவனங்கள் செயல்படவே முடியாது என்கிற போது, ரிசர்வ் வங்கி அல்லது அரசின் அனுமதி பெற்ற செயலிகளை மட்டுமே வலையேற்ற வேண்டும் என, கூகுளோடும், ஆப்பிள் நிறுவனத்தோடும் இணைந்து, கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருக்கலாமே?
இந்தியாவில், குறிப்பாக, தென் மாநிலங்களில், ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் வீச்சு மிக அதிகமாக இருக்கிறது. சட்டரீதியாக உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பல கோடி ரூபாயை வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கின்றன அவை. இவற்றின் கொட்டத்தை உடனடியாக அடக்காவிட்டால், ஏராளமான தற்கொலை செய்திகளை நாம் படிக்கப் போவது உறுதி.இன்னும் வாளாதிருக்கலாமா அரசு?
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|