பதிவு செய்த நாள்
14 பிப்2021
22:34
பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருப்பதோடு, முதன்மை சந்தையும் சுறுசுறுப்பாக இருக்கிறது. பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், ஐ.பி.ஒ., எனும் பொது பங்கு வெளியீடு மூலம், பங்குச்சந்தையில் நுழைந்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன. ரெயில்டெல் நிறுவன பங்கு வெளியீடு வரும் 16ம் தேதி நிகழும் நிலையில், ஜோமேட்டோ, டெல்ஹிவரி, பேடிஎம் உள்ளிட்ட இணைய நிறுவனங்களும் பங்கு வெளியீட்டிற்கு உத்தேசித்துள்ளன.
பங்கு வெளியீடு நல்ல வாய்ப்பாக அமைந்தாலும், முதலீட்டாளர்கள் சரியான வாய்ப்பை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் பங்கு வெளியீட்டின் போது மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள் வருமாறு:
இடர் என்ன?
பங்கு வெளியீட்டில் பங்கேற்க தீர்மானிக்கும் போது, முதலீட்டாளர்கள் பங்கு வெளியிடும் நிறுவனம் தொடர்பாக போதிய தகவல்களை அறிந்திருக்க வேண்டும். பங்கு வெளியீடு தொடர்பான சாதகமான அம்சங்களை மட்டும் அல்லாமல், இடர் அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
அதிக மதிப்பீடு:
பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது, பங்கு வெளியீடு வெற்றிகரமாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. ஏறுமுகமான சந்தையில், பங்கு வெளியீட்டிற்கான விலையும் அதிகமாக இருக்கலாம். ஆனால், இந்த விலை, நிறுவன அடிப்படை அம்சங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதா என ஆராய வேண்டும். அதிக மதிப்பீட்டு இடரை தவிர்க்க இது உதவும்.
பங்கின் தகுதி:
பங்கு வெளியீடு தொடர்பான ஒவ்வொரு அம்சத்தையும், கவனமாக பரிசீலித்து, பங்கின் தகுதி அடிப்படையிலேயே முதலீட்டை தீர்மானிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைமை, தனியார் முதலீட்டாளர்களின் பங்கேற்பு உள்ளிட்ட அம்சங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
வர்த்தகம் என்ன?
பங்கு வெளியிடும் நிறுவனத்தின் வர்த்தக மாதிரி என்ன என்பதை பரிசீலிக்க வேண்டும். சந்தையில் போட்டியை சமாளிக்கும் ஆற்றலை நிறுவனம் பெற்றிருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும். நிறுவனத்தின் நிதி நிலை அம்சங்களும் வலுவாக இருக்கின்றனவா என பரிசீலிக்க வேண்டும்.
ஒப்பீடு அவசியம்:
இதே துறையில் ஏற்கனவே, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்கு விலையுடன், புதிய நிறுவன பங்கு விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வளர்ச்சி வாய்ப்புக்கான சாத்தியங்கள் அதிகமாக இருந்தால், அதிக விலையாக இருந்தாலும் முதலீடு செய்யலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|