பதிவு செய்த நாள்
18 பிப்2021
21:22
தொழில்நுட்பத்தில் புதுப்புது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தாக்கம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களிலும் பிரதிபலிப்பதை பார்க்க முடிகிறது.
உதாரணமாக, மின்சார பல்புகளை எடுத்துக்கொண்டால் துவக்கத்தில், குண்டு பல்புகளாக இருந்தன, அதன்பின், டியூப் லைட், எல்.இ.டி., என மாற்றம் கண்டு, தற்போது, எமர்ஜென்சி எல்.இ.டி., என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது.‘சி.கே பிர்லா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘ஓரியன்ட் எலெக்ட்ரிக்’ நிறுவனம், அண்மையில் எமர்ஜென்சி எல்.இ.டி., பல்புகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் புனித் தவான் உடனான உரையாடலில் இருந்து...
இந்த புதிய வகை எல்.இ.டி., பல்பின் சிறப்புஅம்சம் என்ன?
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், தொடர்ந்து எரியும் என்பதுதான் இதன் சிறப்பு. இந்த பல்பில் பேட்டரி மற்றும் சார்ஜர் உள்ளது. அதிகபட்சம், நான்கு மணிநேரம் வரை இந்த பல்பை, மின்சாரம் இன்றி பயன்படுத்த முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், ஒரு நொடிகூட நம்மால் இருட்டைப் பார்க்க முடியாது. அவ்வளவு விரைவாக இந்த பல்பு செயல்படும். தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து ஹோல்டர்களிலும் இந்த பல்பை பொருத்த முடியும். மின்சாரம் மீண்டும் வந்ததும், பல்பு தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.\
மின்சார தடை வெகுவாக குறைந்து வரும் நிலையில், இந்த பல்புக்கான தேவை இருக்குமா?
மின் தடை பிரச்னை தற்போது பெருமளவுக்கு குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும், அரை மணி அல்லது, ஒரு மணிநேரம் வரை அவ்வப்போது மின்தடை இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் வசதியான வீடுகளில், ‘இன்வெர்ட்டர்’களை பயன்படுத்தி சமாளித்துக் கொள்கிறார்கள். சாதாரணமானவர்களுக்கு? ‘இன்வெர்ட்டர்’ வாங்க கிட்டத்தட்ட, 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக, இத்தகைய பல்பை வாங்கி, மின் தடையை எளிதாக சமாளிக்கலாம். இனி ‘இன்வெர்ட்டர்’ தேவை குறைந்துவிடும்.
இதன் விலை என்ன?
சாதாரண, எல்.இ.டி., பல்பை விட, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை இவற்றின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த பல்புகளை மற்ற பல்புகளுடன் ஒப்பிடக் கூடாது. ‘இன்வெர்ட்டர்’ வாங்குவதுடன் ஒப்பீடு செய்வதே சரியாக இருக்கும். இந்த பல்புகளை தாராளமாக, 3 முதல், 5 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்த முடியும்.
உங்களின் உற்பத்தி, மற்றும் சந்தை அளவு குறித்து கூற முடியுமா?
எங்களிடம் உள்ள இரு உற்பத்தி ஆலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் பல்புகளை தயார் செய்கிறோம். எங்களது மொத்த உற்பத்தியில், பத்து சதவீதம் அளவுக்கு எமர்ஜென்ஸி எல்.இ.டி.,கள் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறோம்.இந்த துறையில் எங்களது குழுமம், 10 ஆண்டுகளுக்கு முன்பு களம் இறங்கியது. இந்த பிரிவில் பெரிய பிராண்டுகள் இருந்தாலும், நாங்கள் இரட்டை இலக்க சந்தையை வைத்து இருக்கிறோம். இந்த துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் சந்தையின் சராசரி வளர்ச்சியை விட, நாங்கள் வேகமாக வளர்கிறோம்.
பிற துறைகளைப் போல, ‘பி.எல்.ஐ.,’ எனும், ‘உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டம்’ எல்.இ.டி., துறைக்கு எப்போது வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?
உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி, இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். எங்கள் துறையிலும் கருத்துகளை அரசு கேட்டிருக்கிறது. வரும் ஏப்ரலில் இது குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|