பதிவு செய்த நாள்
21 பிப்2021
21:22
பெட்ரோல் விலை, ராஜஸ்தான் மாநிலத்தில், 100 ரூபாயைத் தொட்டுவிட்டது. எது நடக்கக்கூடாது என்று கருதினோமோ, அது நடைபெறத் துவங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் இருந்து, எப்போது மீளப் போகிறோம்?
பிப்ரவரி மாதம் மட்டும், பெட்ரோல் விலை, 1 லிட்டருக்கு, 17.50 ரூபாயும்; டீசல் விலை, 16 ரூபாயும் உயர்ந்திருக்கின்றன. உண்மையிலேயே, ‘வரலாறு காணாத விலையேற்றம்’ என்ற சொல்லுக்கு, இப்போது தான் பொருள் தெரிகிறது. இதன் பாதிப்புகள் தான் முக்கியமானவை. இத்தனை மாதங்களாக, அது தெரியாமல் இருந்தது. சாதாரணர்களும், மத்தியமர்களும் வாங்கும் காய்கறிகள், மளிகை சாமான்கள் உட்பட அனைத்துப் பொருட்களிலும், பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் பிரதிபலிக்கத் துவங்கியுள்ளது கண்கூடு.
இதற்கு என்ன காரணம்?
இரண்டு அம்சங்கள்தான். சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை, உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் வேளையில், பீப்பாய் ஒன்றின் விலை, 63 டாலர்.
இந்தியன் பாஸ்கெட்
இதே விலையை நாம் கொடுப்பதில்லை என்பது உண்மை தான். நாம் வாங்கும் கச்சா எண்ணெயின் ஒட்டுமொத்த விலையை, ‘இந்தியன் பாஸ்கெட்’ என்று குறிப்பிடுவோம். அது தோராயமாக, 54 டாலரில் இருக்கிறது. ஆனால், இதற்கு முன் இந்த விலை, 30 டாலராகவும், 40 டாலராகவும் இருந்தது. கடந்த ஆண்டு, 19 டாலர் வரை கூட விலை குறைந்திருந்தது.
எண்ணெய் உற்பத்தி நாடுகளான ஒபெக் நாடுகள், இத்தனை மாதங்களாக, புதிய துரப்பணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே, சேமித்து வைத்திருந்த கச்சா எண்ணெய் பீப்பாய்களையே விற்றுக்கொண்டு இருந்தன.அவ்வளவு உபரி இருந்தது. வீழ்ந்த விலையைச் சீராக்க வேண்டும் என்பதே, ஒபெக் நாடுகளின் நோக்கமாக இருந்தது. அதில் அவர்கள் வெற்றி கண்டுவிட்டனர்.
இரண்டாவது முக்கிய காரணம், இந்தியாவில் விதிக்கப்படும் மத்திய, மாநில வரிகள். 1 லிட்டர் பெட்ரோலில், இவை இரண்டும் சேர்ந்து, 63 சதவீதமும், 1 லிட்டர் டீசலில், 54 சதவீதமும் வசூலிக்கப்படுகின்றன. கடந்த, ஆறு ஆண்டுகளில், மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் மீது விதித்த வரியின் மூலம் மட்டும், 3.25 லட்சம் கோடி ரூபாய் திரட்டியிருக்கிறது.மாநிலங்களின் வரி வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.
உண்மையில் இதற்குத் தீர்வு என்ன?
உலக அளவில் மீண்டும், கச்சா எண்ணெயின் தேவை பெருகிஉள்ளது. அதனால், ஒபெக் நாடுகள், மீண்டும் கச்சா எண்ணெய் துரப்பணத்தை துவங்க உள்ளன. மார்ச் முதல், படிப் படியாக, கச்சா எண்ணெய் உற்பத்தி துவங்கும்போது, சர்வதேச சந்தையில் அதன் விலை சரிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பலன் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
இரண்டு, வரிகளைச் சீர்திருத்துவது. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்கள் தான் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைப் பற்றிப் பேசுகின்றனரே அன்றி, ஆளும் தரப்பில் இருப்பவர்கள் பேசுவதில்லை.ஏனெனில், இது அவர்களுடைய வருவாயின் முக்கியப் பகுதி. அதை விட்டுக்கொடுக்க எவருமே தயாராக இல்லை.
மதிப்புக் கூட்டு வரி
நாம் இங்கே இரண்டு அம்சங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். ஒன்று, பெட்ரோலியப் பொருட்களை நேரடியாக, ஜி.எஸ்.டி.,யின் வரி அடுக்குகளுக்குள் கொண்டு வருவது. அல்லது குறைந்தபட்சம், ஒவ்வொரு மாநிலமும் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தாமல் இருப்பது. மத்திய அரசும் கலால் வரியை உயர்த்தாமல் இருப்பது.கச்சா எண்ணெய் விலை சரியும்போது, இத்தகைய வரிகளை உயர்த்திக்கொண்டே போனதன் பலன் தான், இன்றைய விலையேற்றம்.
இத்தகைய வரிகளை சதவீத அடிப்படையில் இல்லாமல் ரூபாய் மதிப்பில், அதாவது, 1 லிட்டருக்கு, 15 அல்லது 20 ரூபாய் என்று வசூலிப்பதாக நிர்ணயித்துக் கொள்ளலாம். அல்லது வசூலிக்கப்படும் தொகையில், உச்ச வரம்பு வைத்துக் கொள்ளலாம். இவையெல்லாவற்றை யும் விட, தற்போது, மத்திய அரசு, வரி வசூலை விட்டுக்கொடுப்பது தான் உடனடி தேவை.
நன்கு பழுத்த கனியைப் பறிப்பதுபோல், மரத்துக்கு வலிக்காமல், வரியை வசூலிக்க வேண்டும். இன்றைக்கு மரத்துக்கு மட்டுமல்ல; கிளைக்கும், இலைக்கும், தண்டுக்கும், வேருக்குமே வலி தெரிகிறது. வலியை நீக்கவேண்டியது ஆட்சியாளர் கடமை, பொறுப்பு.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|