பதிவு செய்த நாள்
23 பிப்2021
21:22
புதுடில்லி:‘இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வருவாய், வரும் நிதியாண்டில், 27 சதவீத வளர்ச்சி காணும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:நடப்பு, 2020 – 21ம் நிதியாண்டில், கொரோனா காரணமாக, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வருவாய் வளர்ச்சி, 26 சதவீதம் பின்னடைவை காணும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
ஆனால், 2021 – 22ம் நிதியாண்டில், இத்துறையின் வருவாய், 27 சதவீதம் வளர்ச்சி காணும். ‘டிஜிட்டல் மற்றும் டிவி’ துறை, வெகு விரைவில், கொரோனாவுக்கு முந்தைய இயல்புநிலையை எட்டி விடும்; பத்திரிகை, திரைப்படம், வானொலி ஆகியவற்றுக்கு தாமதமாகும்.
எதிர்பார்ப்பு
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் விளம்பரம் மற்றும் சந்தா வருவாய் முறையே, 31 சதவீதம் மற்றும் 24 சதவீதம் வளர்ச்சி காணும்.இத்துறையின் வருவாயில், ‘டிவி’யின் பங்கு, 50 சதவீதமாக உள்ளது. அடுத்த ஆண்டு, இப்பிரிவு மீண்டும் முழு வளர்ச்சியை எட்டிவிடும். புதிய நிகழ்ச்சிகள், ‘இந்தியன் பிரிமியர் லீக்’ போன்ற விளையாட்டுகள் ஒளிபரப்பு மற்றும் பண்டிகை கால விளம்பரங்கள் மூலம், ‘டிவி’யின் விளம்பர வருவாய் உயரும்.
அதே சமயம், மொத்த வருவாயில், 20 சதவீத பங்களிப்பை கொண்ட பத்திரிகை துறை, மெதுவாக எழுச்சி கண்டு வருகிறது. இப்பிரிவு, அடுத்த நிதியாண்டு இறுதியில், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரிகைகள், விளம்பர வருவாயை, ‘டிஜிட்டல்’ ஊடகங்களிடம் இழந்து வருகின்றன.
இருமடங்கு உயரும்
குறிப்பாக, ஆங்கில பத்திரிகைகள், ‘இ – பேப்பர்’ களால், 8 – 10 சதவீத, வருவாய் இழப்பிற்கு ஆளாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சவாலை சமாளிக்க, பத்திரிகைகள், செலவினங்களை சீரமைத்து, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன.
வலைதள செய்தி, விளையாட்டு, மின்னணு வணிகம், மின்னணு கல்வி போன்றவற்றால், ‘டிஜிட்டல்’ ஊடகங்களில் விளம்பரம் செய்ய நிறுவனங்கள் விரும்புகின்றன. அதனால், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், டிஜிட்டல் பிரிவின் தற்போதைய, 10 சதவீத வளர்ச்சி, 2024ல், இருமடங்கு உயரும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|