பதிவு செய்த நாள்
14 மார்2021
21:20
வைப்பு நிதி முதலீட்டை நாடும் சராசரி முதலீட்டாளர்கள், தற்போதைய சூழலில் குறுகிய கால அணுகுமுறையை பின்பற்றுவது ஏற்றதாக இருக்கும்.
பொது முடக்க பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், சராசரி முதலீட்டாளர்கள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு பக்கம் பழைய வருமானத்தை தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு பட வேண்டியிருக்கிறது என்றால், இன்னொரு பக்கம், வைப்பு நிதி உள்ளிட்ட நிரந்த வருமானத்திற்கான முதலீடுகள் தரும் பலன் குறைவாக உள்ளது.
அதிலும் பணவீக்கத்தின் பாதிப்பை கணக்கில் கொண்டால், வைப்பு நிதி அளிக்கும் பலன், மிக சொற்பமாக அமையும் நிலை உள்ளது. இதனால், வைப்பு நிதி முதலீட்டை பிரதானமாக நாடும் சராசரி முதலீட்டாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பொருளாதார மீட்சி
இந்நிலையில், வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக, பொருளாதார மீட்சி தொடர்பான தகவல்கள் அமைகின்றன. வைப்பு நிதிகளை பொறுத்தவரை, வட்டி விகித போக்கில் மாற்றம் ஏற்படலாம் என்பதற்கான அறிகுறியாகவும் இது அமைகிறது.
அண்மை காலமாக, ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள், குறைந்த வட்டி விகித போக்கிற்கு ஆதரவாக அமைந்தன. மேலும், பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை யும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக, கடன்களுக்கான வட்டி குறைந்ததோடு, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதமும் குறைந்தது.
மேலும், வங்கிகளும் கடன் வழங்குவதில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றின. இதனால், கடன் தேவை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பதால், வைப்பு நிதி வாயிலாக நிதி திரட்டும் தேவையும் குறைந்தது. கடந்த ஆண்டு நிலவிய இந்த சூழல் இந்த ஆண்டும் தொடரும் நிலை இருந்தாலும், வரும் மாதங்களில் நிலைமை மாறலாம் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொருளாதார மீட்சி காரணமாக, வளர்ச்சி மேம்படும் நிலை உள்ளது. இது, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகித போக்கை மாற்றும் என எதிர்பார்க்கலாம்.
குறுகிய கால உத்தி
பொருளாதார வளர்ச்சி காரணமாக, கடன் தேவையும் அதிகரிக்கும் என்பதால், வங்கிகள் வைப்பு நிதி திரட்டுவதில் ஆர்வம் காட்டலாம். ரிசர்வ் வங்கி, இன்னும் சில காலத்திற்கு தற்போதைய அணுகுமுறையே பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதால், உடனடியாக வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
எனினும், வரும் மாதங்களில் இது நிகழலாம். ஏனெனில், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் வட்டி விகிதம் உயரலாம் என கருதப்படுகிறது.இப்போதே ஒரு சில வங்கிகள், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளன.
வரும் மாதங்களில் மேலும் பல வங்கிகள் இவ்வாறு செய்யலாம். இந்த சூழலில், சராசரி முதலீட்டாளர்கள், வைப்பு நிதி முதலீட்டை நாடும் போது, குறுகிய கால அளவை தேர்வு செய்யலாம்.
ஒரு ஆண்டு அல்லது 18 மாத அளவில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், வட்டி விகிதம் உயரும் சூழலில், வைப்பு நிதி முதிர்வு தொகையை விலக்கி, புதிய வட்டி விகிதத்தில் முதலீடு செய்யலாம். மேலும், வைப்பு நிதி முதலீட்டை மொத்தமாக செய்யாமல், படிப்படியாக மேற்கொள்ளும் உத்தியையும் பின்பற்றலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|