பதிவு செய்த நாள்
14 மார்2021
21:28
முதலீட்டாளர்கள் எப்போதும் நிதி விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்ல முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண்பதோடு, ஏமாற்று நோக்கிலான திட்டங்களையும் கண்டறியும் திறன் பெற்றிருக்க வேண்டும். தற்போது, ‘டிஜிட்டல்’ வடிவிலும் மோசடி திட்டங்கள் அரங்கேறத் துவங்கியுள்ளன. அண்மையில், செயலி மூலம் மோசடி திட்டம் நடத்தியவர்கள், ஆமாதாபாதில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக லாபம் தரும் கடன் பத்திரங்களை விற்பதாக கூறி, மோசடி நடைபெற்றுள்ளது. இத்தகைய மோசடி நிதி திட்டங்களை கண்டறிவதற்கான வழிகள் இதோ:
இடர் எங்கே?
எந்த முதலீட்டிலும் இடர் அம்சம் நிச்சயம் உண்டு. இடர் குறைவாக இருந்தால், பலனும் குறைவாக இருக்கும். பலன் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப இடரும் அதிகமாக இருக்கும். மாறாக, குறைந்த இடரில் அதிக பலன் அளிப்பதாக உறுதி அளித்தால், அது ஏமாற்றுவதற்கான வலையாக இருக்கலாம்.
என்ன பலன்?
மோசடி திட்டங்களை நடத்துபவர்கள், ஈர்க்கக் கூடிய வகையில் பலன் அளிக்கும் அம்சங்களை முன் வைப்பது வழக்கம். பொதுவாக ஆண்டுக்கு, 12 சதவீதத்திற்கு மேல் பலன் அளிப்பதாக உறுதி அளிக்கும் திட்டங்கள், மோசடி நோக்கிலானவையாக இருக்கலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பங்கு ஒப்பீடு:
பங்கு முதலீடே சராசரியாக, 10 முதல் 12 சதவீதம் வரை பலன் அளிக்கக் கூடியதாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு நிகரான இடர் உண்டு என்பதோடு, நீண்ட கால முதலீடும் அவசியம். சம பங்குகளை விட, அதிக பலன் அளிக்கக் கூடிய முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் இல்லை என்பதை உணர வேண்டும்.
வர்த்தக மாதிரி:
நிதி திட்டங்கள் பலன் அளிக்க வேண்டும் என்றால், அவற்றுக்கான வர்த்தக மாதிரி வலுவாக இருக்க வேண்டும். முதலீடு செய்யும் முன், வர்த்தக மாதிரியை அறிந்து கொள்ள வேண்டும். அனேகமாக மோசடி திட்டங்கள், எளிதில் புரியாத வர்த்தக மாதிரியை கொண்டிருக்கும்.
போலி சான்றிதழ்கள்:
மோசடி திட்டங்களை நடத்துபவர்கள், பல நேரங்களில் உரிய சான்றிதழ் பெற்றிருப்பதாக கூறி நம்பகத் தன்மையை பெற முயற்சிக்கலாம். ஆனால், இந்த சான்றிதழ்கள் போலியானவை யாக இருக்கலாம் அல்லது வர்த்தகத்திற்கு தொடர்பு இல்லாதவையாகவும் இருக்கலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|