பதிவு செய்த நாள்
26 மார்2021
20:55
புதுடில்லி:சமீபகாலமாக, புதிய பங்கு வெளியீடுகளுக்கு முதலீட்டாளர்களிடம் பெருத்த வரவேற்பு காணப்படுகிறது.
பங்குகள் பட்டியலிடப்படும் நாளன்று, வெளியீட்டு விலையை விட, அதிக விலை கிடைப்பதே இதற்கு காரணம். ஆனால், இந்த வாரம் ஒரு நிறுவனம் தவிர்த்து, இதர மூன்று நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளன்று, வெளியீட்டு விலையை விட குறைந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளன. அனுபம் ரசாயன் நிறுவனம், பங்கு ஒன்று, 555 ரூபாய் என்ற விலையில், புதிய பங்கு வெளியீடு மேற்கொண்டது. இப்பங்குகள் வேண்டி, 44 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
தேசிய பங்குச் சந்தையில், இப்பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளன்று, வெளியீட்டு விலையை விட, 6.31 சதவீதம் குறைவாக, 520 ரூபாய்; மும்பை பங்குச் சந்தையில், 3.66 சதவீதம் குறைவாக, 534.70 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டன.புதிய பங்கு வெளியீடு மேற்கொண்ட, கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனம், ஒரு பங்கின் விலையை, 1,490 ரூபாயாக நிர்ணயித்திருந்தது. இந்த பங்கு, மும்பை பங்குச் சந்தையில், வெளியீட்டு விலையை விட, 9.4 சதவீதம் குறைவாக, 1,350 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது.
புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கிய, லட்சுமி ஆர்கானிக்ஸ் நிறுவனம், ஒரு பங்கின் விலையை, 130 ரூபாயாக நிர்ணயித்திருந்தது. இது, மும்பை பங்குச் சந்தையில், 20.15 சதவீதம் உயர்ந்து, 156.20 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, 19.62 சதவீதம் உயர்ந்து, 155.50 ரூபாய்க்கு கைமாறியது.
தங்க ஆபரணங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு மேற்கொண்டது. ஒரு பங்கின் அதிகபட்ச விலை, 87 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில், பங்கு வெளியீட்டு விலையை விட, 15.06 சதவீதம் குறைவாக, 73.90 ரூபாய்; தேசிய பங்குச் சந்தையில், 16.03 சதவீதம் குறைவாக, 73 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டன. இதே போல, சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பங்குகளும், வெளியீட்டு விலையான, 305 ரூபாயை விட, 4 சதவீதம் குறைந்து, 293 ரூபாய்க்கு, மும்பை பங்குச் சந்தையிலும்,தேசிய பங்குச் சந்தையில், 4.26 சதவீதம் குறைந்து, 292 ரூபாய்க்கும் பட்டியலிடப்பட்டன.
காரணம் என்ன?
அன்னிய முதலீடு அதிக அளவில் வெளியேறி வருவதால், இந்த வாரம் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இது, பட்டியலிடப்பட்ட புதிய பங்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்று, பங்குகள் பட்டியலிடப்படும் நாளன்று அதிக விலைக்கு விற்று லாபமீட்ட எண்ணியிருந்த முதலீட்டாளர்கள் ஏமாற்றத்தையும், இழப்பையும் சந்தித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|