பதிவு செய்த நாள்
26 மார்2021
20:57
புதுடில்லி:டாடா குழுமத்தின் செயல் தலைவராக, சைரஸ் மிஸ்திரியை நியமித்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது, டாடா குழுமத்தின் ஐந்தாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா,2012ல் ஓய்வு பெற்று, கவுரவ தலைவரானார். அவர், ஷபூர்ஜி பலோன்ஜி குழும தலைவர், சைரஸ் மிஸ்திரியை, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். ஆனால், சைரஸ் மிஸ்திரியின் நான்காண்டு செயல்பாடுகளில், ரத்தன் டாடா அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து, டாடா சன்ஸ் இயக்குனர் குழு, 2016 அக்.,ல், சைரஸ் மிஸ்திரியை பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது.இதை எதிர்த்து, சைரஸ் மிஸ்திரி, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 2019 மே, 23ல், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, டாடா சன்ஸ் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, ஜன., 10ல், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில், சட்டத்திற்குட்பட்ட அனைத்து கேள்விகளுக்கான பதில், டாடா குழுமத்திற்கு சாதகமாக உள்ளது.
எனவே, டாடா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சைரஸ் மிஸ்திரியின் செயல் தலைவர் நியமனம் தொடர்பாக, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தன்னடக்கம்
‘‘சீரிய நெறிமுறைகள், நியாயமான மதிப்பீடுகள் ஆகியவையே டாடா குழுமத்தின் வழிகாட்டு கொள்கைகள் ஆகும். இதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது; அதற்கு என் பாராட்டுகள். இதில், வெற்றி, தோல்வி என்பதை நான் பார்க்கவில்லை,’’ என, ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|