பதிவு செய்த நாள்
31 மார்2021
19:26
புதுடில்லி:இந்தியாவில், கொரோனா காலத்தில், 30 லட்சம் பேர் ‘டிஜிட்டல்’ திறன் பெறுவதற்கு உதவியிருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகின், 249 நாடுகளில், கிட்டத்தட்ட, 3 கோடி பேருக்கு மேல் கொரோனா காலத்தில், டிஜிட்டல் திறன் பெறுவதற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்துள்ளது. இதில், இந்தியாவில் மட்டும், 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு ஜூலையில், 2.5 கோடி பேரை டிஜிட்டல் திறன் மிக்கவர்களாக மாற்ற உதவுவது என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, அதைவிட அதிகமானோர் பலன் பெற்றுள்ளனர்.
மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனம், நடப்பு ஆண்டில் திறன் அடிப்படையிலான ஆட்களை பணியில் அமர்த்துவதற்கு உலகளவில், 2.5 லட்சம் நிறுவனங்களுக்கு உதவும்.பணி நீக்கம் செய்யப்பட்ட ஆலைத் தொழிலாளர்கள் முதல், சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றியவர்கள், லாரி ஓட்டுனர்கள் வரை, லட்சக்கணக்கானவர்கள் கொரோனா காலத்தில் ‘கிட்கப், லிங்க்ட்இன் மைக்ரோசாப்ட்’ ஆகியவற்றின் மூலம் ‘ஆன்லைன்’ வாயிலாக கற்கத் துவங்கினர். இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை, திட்ட மேலாண்மை, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட, பல பணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.
கொரோனா பாதிப்புக்கு பிறகு, திறன் என்பது உலகின் புதிய பணமாகவே மாறியிருக்கிறது. இந்தியாவில், மைக்ரோ சாப்ட் நிறுவனம் அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து, நாட்டில் வலுவான ஒரு டிஜிட்டல் திறன் சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு, மைக்ரோசாப்ட் இந்தியாவில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கைகோர்த்து, டிஜிட்டல் திறன் கொண்ட ஒரு லட்சம் இளம் பெண்களை மேம்படுத்தியது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|