பதிவு செய்த நாள்
01 ஏப்2021
20:42
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, கடந்த மார்ச் மாதத்தில், 1.67 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கொரோனா பரவல் காரணமாக, 83 ஆயிரத்து, 792 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தன. இக்காலகட்டத்தில் தயாரிப்பு மற்றும் வினியோகம் என இரு தரப்பிலும் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச்சில் மட்டும், உள்நாட்டு விற்பனை, 48 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது. ஆனால், நடப்பு ஆண்டு மார்ச்சில் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும், மார்ச், 2019 காலத்தில் இருந்த விற்பனை நிலையை மட்டுமே எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ நிறுவனத்தின் வாகன விற்பனை மார்ச்சில், 15 ஆயிரத்து, ஒன்று என்ற நிலையை எட்டியிருக்கிறது. இது, கடந்த 8 ஆண்டுகளின் மார்ச் மாதங்களில் இல்லாத உயர்வாகும். 2013ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு, அதிக விற்பனை, கடந்த மார்ச்சில் நடைபெற்றுள்ளது.
‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனம், கடந்த மார்ச்சில், 40,403 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.
‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம் மார்ச் மாதத்தில் 64 ஆயிரத்து, 621 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு மார்ச்சில் 26 ஆயிரத்து 300 ஆகவும், கடந்த பிப்ரவரியில், 52 ஆயிரத்து, 600 ஆகவும் இருந்தது குறிப்பிடத் தக்கது.
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், உள்நாட்டில், மார்ச்சில், 66 ஆயிரத்து, 609 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு மார்ச்சில், 11 ஆயிரத்து, 12 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|