பதிவு செய்த நாள்
04 ஏப்2021
19:59
புதிய பங்கு வெளியீடுகள் அதிகரித்து வரும் நிலையில், சராசரி முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி ஒரு பார்வை.
வர்த்தக நிறுவனங்கள் நிதி திரட்டும் நோக்கில், பொது பங்குகளை வெளியிட்டு வருவதால், இந்திய மூலதன சந்தை அண்மைக்காலமாக மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது.
கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, 34 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழையும் வகையில் பொது பங்குகளை வெளியிட்டு, 21,000 கோடி ரூபாய் அளவு நிதி திரட்டின. ஐ.பி.ஓ., எனப்படும் இந்த பங்கு வெளியீடுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.
பெரும்பாலான வெளியீடுகள் அதிக அளவு ஆதரவை பெற்றன. இந்த நிதியாண்டும் பொது பங்கு வெளியிட்டுகள் அதிக அளவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் வெளியீடுகள்
கொரோனா பாதிப்புக்கு பின் நிகழும் பொருளாதார மீட்சி சூழலில் பல நிறுவனங்கள் சந்தையில் நுழைந்து நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதால், பொது பங்கு வெளியீடுகள் தொடரும் என கருதப்படுகிறது. இந்த ஆண்டு, 41,864 கோடி அளவில் பங்கு வெளியீடுகள் மூலம் நிதி திரட்டப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த வட்டி விகித போக்கு, போதுமான பணப்புழக்கம் உள்ளிட்ட அம்சங்கள் நிதி திரட்ட சாதகமாக அமைந்து உள்ளன. மேலும், அரசு பங்கு விலக்கல் திட்டத்தை பெரிய அளவில் அறிவித்திருப்பதும் சாதகமான அம்சமாக அமைந்துள்ளது.பொது பங்கு வெளியீடுகள் அதிக அளவில் நிகழ்வது முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க கூடியது என்றாலும், சில்லரை முதலீட்டாளர்களைப் பொருத்தவரை, கவனமான அணுகு முறை தேவை என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வது இடர் மிகுந்தது. நேரடி பங்கு முதலீட்டிற்கு இத்துறையில் அனுபவமும் தேர்ச்சியும் தேவை.எனினும், சில்லரை முதலீட்டாளர்களில் சிலர், பங்குகள் பட்டியலிடப்படும் போது ஆதாயம் பார்ப்பதற்காக பங்கு வெளியீடுகளில் ஆர்வம் காட்டும் போக்கு காணப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
ஆவணங்கள் ஆய்வு
சில்லரை முதலீட்டாளர்கள், பொது பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வதில் அவசரம் காட்டக்கூடாது. பங்கு வெளியீடுகளில், சில்லரை முதலீட்டாளர்களுக் கான பங்கு மிகவும் குறைவானதாகவே அமைகிறது. மேலும், பங்கு வெளியீட்டிற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்தால், சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும் பங்குகள் சொற்பமாகவே இருக்கும். இதற்காக அதிக நேரம் மற்றும் ஆய்வை செலவிட வேண்டியதில்லை என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, அதிக அளவிலான லாபத்தை எதிர்பார்த்து கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.பங்கு வெளியீடுகள் தொடரும் என்றாலும், தற்போதுள்ள உற்சாக சூழல் நீடிக்குமா என்பது கேள்விக்குறி என்கின்றனர். மேலும் சந்தையின் ஏற்ற இறக்கம், புதிய வெளியீடுகளை பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, சில்லரை முதலீட்டாளர்கள் தங்களுக்கான வாய்ப்பை கவனமாக பரிசீலிக்க வேண்டும். மேலும் விளம்பரம் மற்றும் நண்பர்களின் பரிந்துரையில் அடிப்படையில் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதே போல, பங்கு வெளியீடு தொடர்பான ஆவணங்களை கவனமாக படித்துப்பார்த்து நிறுவன வர்த்தக செயல்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும். மிகை எதிர்பார்ப்பிலும் முதலீட்டை மேற்கொள்ளக்கூடாது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|