பதிவு செய்த நாள்
09 ஏப்2021
19:03
மும்பை:கடந்த பிப்ரவரியை விட, மார்ச்சில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அதிக அளவில் ஊழியர்கள் தேவை என, வேலைவாய்ப்பு தளமான, ‘நாக்ரி’யில் பதிவு செய்துள்ளன. நாக்ரி வலைதளம், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுவோருக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.
வளர்ச்சி
இந்த வலைதளத்தில், பணியாளர் தேவை குறித்து பதிவு செய்யும் நிறுவனங்களின் அடிப்படையில், மாதந்தோறும் ‘நாக்ரி ஜாப்ஸ்பீக்’ குறியீடு வெளியிடப்படுகிறது. நிறுவனங்களின் பணியாளர் தேவை குறித்த அளவுகோலாக கருதப்படும், இக்குறியீடு, மார்ச் மாதத்தில், 3 சதவீதம் உயர்ந்து, 2,436 பதிவுகளாக அதிகரித்துள்ளது. இது, பிப்ரவரியில், 2,356 ஆக காணப்பட்டது.
இது குறித்து, ‘நாக்ரி டாட் காம்’ நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி, பவன் கோயல் கூறியதாவது:கடந்த, 2020, அக்., – டிச., வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு, ஜன.,– மார்ச் வரை, நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது, 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முக்கிய காரணம் எனலாம். பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளதால், பணியாளர் தேர்வு அதிகரித்துள்ளது.
இதை, சமீபத்திய ஆய்வில், 83 சதவீத நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. சில்லரை விற்பனைபிப்ரவரியை விட, மார்ச்சில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வல்லுனர்களை தேர்வு செய்வது, 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சில்லரை விற்பனை துறையில், 15 சதவீதமாக உள்ளது. பணியாளர் தேர்வு நடவடிக்கைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், 7 சதவீதம், கணக்கு, வரி, நிதி துறையில், 6 சதவீதம், தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை துறையில், 5 சதவீதம் வளர்ச்சி கண்டுஉள்ளன.
பி.பி.ஓ., மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறையும், வங்கி, நிதிச் சேவைகள் துறையும், தலா, 1 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளன. அதேசமயம், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கல்வி, நுகர்பொருள், விருந்தோம்பல் துறைகள், முறையே, 13 சதவீதம், 10 சதவீதம், 8 சதவீதம் என, வளர்ச்சி கண்டுள்ள போதிலும், அவை முந்தைய மாதத்தை விட, குறைவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆமதாபாத் முதலிடம்
இந்தாண்டு, பிப்ரவரியை விட, மார்ச்சில், பணியாளர் நியமனம் தொடர்பான நிறுவனங்களின் நடவடிக்கைகளில், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரம், 13 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. கோல்கட்டா, வதோதரா தவிர, ஆறு முக்கிய நகரங்களும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|