பதிவு செய்த நாள்
18 ஏப்2021
20:47
கொரோனா இரண்டாம் அலை, நிதி நோக்கில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாத்து கொள்வதற்கான வழிகள்.
கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், நாடு முழுதும் இரண்டாம் அலை பாதிப்பு அச்சுறுத்த துவங்கிஇருக்கிறது. இரண்டாம் அலையின் தாக்கம் எப்படி இருக்கும்? மீண்டும் பொது முடக்கம் வருமா போன்ற கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை பொருளாதார நோக்கில் எதிர்கொள்வதற்கான நிலையில் இருக்கிறோமா எனும் கேள்வி ஒவ்வொருவருக்கும் முக்கியமாகிறது.
நிதி பாதுகாப்பு
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது நம் கைகளில் இல்லை என்றாலும், அதன் நிதி பாதிப்பை கட்டுப்படுத்துவது நிச்சயம் நம் கைகளில் இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு கற்றுத் தந்த நிதி பாடங்களை வழிகாட்டியாக கொள்வதோடு, தற்போதைய சூழலில் தவிர்க்க வேண்டிய முதலீட்டு தவறுகளையும் அறிந்து இருப்பது கைகொடுக்கும்.
கொரோனாவால் பணி இழப்பு, ஊதியக் குறைப்பு போன்ற பாதிப்புகள் உண்டானபோது, பலரும் வழக்கமான முதலீட்டை தொடர முடியாமல் தடுமாறினர்.தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் நிதி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதலீட்டை தொடர்வதே ஏற்றது. ஏற்கனவே அவசர கால நிதியை உருவாக்கி வைத்துள்ளவர்கள் அல்லது கொரோனா அனுபவத்தால் அவசர கால நிதி தேவையை உணர்ந்தவர்கள், நிலைமையை சமாளித்து முதலீட்டை தொடரலாம். அதே போல, இரண்டாம் அலையில் சந்தையின் போக்கை கணிக்க முயன்று, அதனடிப்படையில் செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
நிதி இலக்கு
எதிர்கால நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டை தொடர வேண்டும். குறுகிய கால அடிப்படையில் முதலீடு முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சந்தையின் போக்கை வைத்து, முதலீட்டை விற்று வெளியேறி லாபம் பார்ப்பது அல்லது பீதியில் விற்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
சம பங்குகள் அல்லது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள், முதலீட்டின் அடிப்படை அம்சங்களை பரிசீலித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முடிவெடுப்பது பாதகத்தை ஏற்படுத்தலாம்.கடன் மற்றும் செலவு பழக்கத்தை பொறுத்தவரை, கட்டுப்பாடு மிக்க அணுகுமுறையை தொடர்வதே நல்லது. வாழ்வியல் தேவைக்கான கடன் வசதியை நாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
‘கிரெடிட் கார்டு’ பயன்பாட்டிலும் கவனம் தேவை. அவசர தேவைக்காக மட்டுமே கிரெடிட் கார்டை பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை கடன் சுமையை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே போல, ‘ஆன்லைன்’ மூலம், ‘ஷாப்பிங்’ செய்ய வாய்ப்பு இருப்பதை பயன்படுத்தி, தேவையில்லாத பொருட்களை வாங்குவதையும் கைவிட வேண்டும்.பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும், கடன்களுக்கான மாத தவணையை தொடர்ந்து செலுத்த வேண்டும். தேவை எனில், தங்க நகைக் கடன் வசதியை பயன்படுத்தி நிலைமையை சமாளிக்கலாம்.
கைவசம் உபரி தொகை இருந்தால், அதிக வட்டி கடனை அடைக்க முயற்சிக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், முதலீடு நோக்கில் வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும். வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள், குறைந்த வட்டி விகிதத்திற்கு மாறுவதன் மூலம் பலன் பெற முடியுமா என, பரிசீலிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|