பதிவு செய்த நாள்
18 ஏப்2021
23:06
என் கணக்கில் இருந்து, 8,000 ரூபாய், ‘டெபிட்’ ஆகிவிட்டதாக, ‘மெசேஜ்’ வந்திருக்கு. வங்கிக் கிளையில் புகார் எழுதிக் கொடுத்திருக்கேன்; பணம் திரும்ப வருமா?
கோகுல், திண்டுக்கல்
புகார் அளித்தது சரி, டெபிட் கார்டை பிளாக் செய்துவிட்டீர்களா? உங்கள் டெபிட் கார்டு விபரங்கள் எங்கோ வெளியாகிவிட்டது என்று அர்த்தம். மேலும், பணத்தை இழக்காமல் இருக்க, முதலில் அட்டையை பிளாக் செய்யுங்கள். எங்கே எடுக்கப்பட்டது; எப்படி எடுக்கப்பட்டது என்பதை வங்கியில் இருந்து தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு, பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவதா? புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவது சரியா?
முருகேசன், காரைக்குடி
நீங்கள் ஏற்கனவே வீட்டுக் கடன், பல்வேறு ஆயுள் காப்பீடு பாலிசிகள், மெடிக்ளெய்ம், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் போன்றவற்றை வைத்திருக்கிறீர்கள் என்றால், பழைய வருமான வரி முறையில் கிடைக்கும் தள்ளுபடி என்ன; புதிய வருமான வரி முறையில் கிடைக்கும் வாய்ப்பு என்ன என்பதைக் கணக்கிட்டு பாருங்கள்.
ஒருவேளை, புதிய முறையில் லாபம் இருப்பதாகத் தெரிந்தால், அதற்கு மாறுங்கள். இதை ஆண்டுக்கு ஒருமுறை தான் மாற்ற முடியும். நிதியாண்டின் நடுவே பழைய முறைக்கே போகிறேன் என்று சொல்ல முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 4,000 வட்டி கிடைக்கும். 36வது மாதம் அசல் திரும்ப வழங்கப்படும் என்று ஒரு திட்டம் சொல்கிறார்களே, போடலாமா?
தாயுமானவர், கோவை
கூடாது; இது மோசடி திட்டம். பொதுத்துறை வங்கியில் வைப்பு நிதியில் சேமித்தால், லட்சம் ரூபாய்க்கு ஆண்டுக்கு, 5,500 ரூபாய் வரை தான் வட்டி கிடைக்கும். அதாவது, 5.5 சதவீதம். மூத்த குடிமக்கள் என்றால், இன்னும் அரை சதவீதம் கிடைக்கலாம். 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், ‘லாக்-இன்’ காலத்தோடு முதலீடு செய்தால், 7 சதவீதம் வரைக்கும் கிடைக்கலாம். இது தான் முறையான வருவாய். மற்றபடி அதிக வட்டி கொடுக்கப்படும் என்று சொல்லப்படுவது எல்லாம் ஜிகினா கனவு. தப்பித் தவறி போய் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
இனிமேல், ‘ஹால்மார்க்’ நகை தான் வெச்சிருக்கணும்னு கட்டுப்பாடு வந்திருச்சாமே? அப்ப பழைய நகையெல்லாம் என்ன செய்யறது? அடகு வைக்க முடியுமா?
கனகா, மதுரை
ஜூன் 1, 2021ல் இருந்து ‘பி.ஐ.எஸ்., ஹால்மார்க்’ தர முத்திரையோடு தான் புதிய தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். இது கடைக்காரர்களுக்கான விதிமுறை. உங்களிடம் ஏற்கனவே உள்ள நகைகளுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. அடகு வைப்பதற்கும் இந்த தர நிர்ணயம் ஒரு தடையாக இராது. அடகு கடைக்காரரோ, தங்கத்துக்கு ஈடாக கடன் தரும் வங்கியோ, வழக்கம்போல், ஆபரணங்களை உரசிப் பார்த்து முடிவு எடுப்பர்.
என் மகளுக்கு விவாகரத்து ஆகப் போகிறது. அவளது எதிர்கால வாழ்க்கைக்காக கொஞ்சம் பணம் போட்டு வைத்திருக்கிறேன். டி.டி.எஸ்., பிடித்தம் செய்து விடுகிறார்கள். பல்வேறு வங்கிகளில், பணத்தைப் பிரித்து, வைப்பு நிதி போட்டு வைத்தால், வரி பிடித்தம் இருக்காது தானே?
பாப்பாத்தி, மதுரை
எத்தனை வங்கிகளில் நீங்கள் வைப்பு நிதி வைத்திருந்தாலும், ‘பான்’ எண் கொடுத்துத் தான் ஆகவேண்டும். அது அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடும். ஓராண்டில், மொத்த வட்டி வருவாய், 40,000 ரூபாய் வரை இருந்தால், அதற்கு டி.டி.எஸ்.. பிடித்தம் கிடையாது.‘படிவம் 15ஜி’ கொடுத்துவிட்டால், பிடித்தம் செய்யமாட்டார்கள். இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கொரோனா தொடர்பான காப்பீட்டு பாலிசிகளை வாங்குவது சரியாக இருக்குமா? அதில் எல்லா செலவுகளையும் எடுத்துக்கொள்வார்களா?
சி.எஸ்.கிருஷ்ணன், ஆவடி
ஏற்கனவே மருத்துவ காப்பீடு திட்டம் எதையும் தாங்கள் வாங்கியிருக்கவில்லை என்றால், ‘கொரோனா கவச் அல்லது கொரோனா ரக்ஷக்’ பாலிசிகளை எடுங்கள். மருத்துவ பாலிசி இருக்குமானால், கொரோனா தொடர்பான மருத்துவமனை செலவுகளுக்கு, அந்தப் பாலிசியில் இருந்தே கட்டணம் செலுத்தலாம்.
மருத்துவ பாலிசியின் காப்பீட்டுத் தொகை அளவை வேண்டுமானால், உயர்த்திக் கொள்ளுங்கள். மருத்துவமனை செலவுகளில், 50 முதல், 55 சதவீதம் வரை தான் காப்பீடு நிறுவனங்கள் ஈடுகட்டியிருக்கின்றன என்ற புள்ளிவிபரத்தையும் தங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன். பல மருத்துவமனை செலவுகளை, காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பதில்லை.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ – மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|