பதிவு செய்த நாள்
25 ஏப்2021
18:59
ஒவ்வொருவரும் அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்வதோடு, அதை சரியான வழியில் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
ஒவ்வொருவரும் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, தங்களுக்கான அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்வதும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. எதிர்பாராத நெருக்கடிகளின் போது, அடிப்படை செலவுகளை சமாளிக்க உதவும் சேமிப்பே, அவசர கால நிதி என குறிப்பிடப்படுகிறது. அவசர கால நிதி கையிருப்பு, அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க வழி செய்வதோடு, பண முடையால் ஏற்படும் மன உளைச்சலையும் தவிர்க்க உதவும்.
எவ்வளவு தேவை
பொதுவாக, ஆறு மாத கால அடிப்படை செலவுகளுக்கான தொகையை, அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது, சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம்.தற்போதைய கொரோனா சூழல், அவசர கால நிதி அவசியத்தை புரிய வைத்துள்ளதோடு, இந்த நிதி கூடுதலாக இருப்பதும் நல்லது என உணர்த்தியுள்ளது.
எனவே, அவரவர் சூழலுக்கு ஏற்ப அவசர கால நிதி அளவை தீர்மானித்துக் கொள்ளலாம். அதிக பாதிப்பிற்கான வாய்ப்புள்ளவர்கள் மற்றும் குடும்பத்தில் சார்ந்துள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளவர்கள், கூடுதல் தொகையை உருவாக்கிக் கொள்வது ஏற்றது.அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்வதோடு, அந்த நிதியை முறையாக பராமரிப்பதும் அவசியம்.
அவசர கால நிதி என்பது, தேவைப்படும் போது உடனடியாக எடுத்துக்கொள்ள அமைந்திருக்க வேண்டும் என்றாலும், இதை முழுதும் ரொக்கமாக வீட்டிலேயே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ரொக்கமாக கையில் இருந்தால், வேறு தேவைகளுக்காக இதை செலவு செய்து விடும் வாய்ப்பு அதிகம். இதனால், அவசர கால நிதியை உருவாக்கிய நோக்கம் பாதிக்கப்படலாம். எனவே, அவசர கால நிதியை பணமாக்கும் தன்மையுடன் முதலீடு செய்வது நல்லது.
சேமிப்பு கணக்கு
அவசர கால நிதியை முதலீடு செய்யும் போது, அது தரக்கூடிய பலனை விட, பாதுகாப்பு மற்றும் பணமாக்கும் தன்மையே முக்கியமானவை. அந்த வகையில், வங்கி சேமிப்பு கணக்கில் அவசர கால நிதியை வைத்து இருக்கலாம். சேமிப்பு கணக்கில் இந்த நிதியை போட்டு வைத்தால், தேவைப்படும் போது எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.மேலும், சேமிப்பு கணக்கிற்கான வட்டி வருமானமும் கிடைக்கும்; பணமும் பாதுகாப்பாக இருக்கும்.
‘ஜீரோ பாலன்ஸ்’ வசதி கொண்ட சேமிப்பு கணக்கு இன்னமும் அனுகூலமாக இருக்கும்.சேமிப்பு கணக்கு நல்ல வாய்ப்பு என்றாலும், கையில் இருக்கும் ரொக்கம் போலவே சேமிப்பு கணக்கில் இருந்தும் பணத்தை எளிதாக விலக்கிக் கொள்ளலாம். எனவே, அவசர நிதிக்கு என தனி சேமிப்பு கணக்கை துவக்கிக் கொள்ளலாம் அல்லது இந்த தொகையை குறுகிய கால வைப்பு நிதியில் போட்டு வைக்கலாம்.
தேவைக்கேற்ப பகுதி அளவு தொகையை வைப்பு நிதியாகவும், மீதித் தொகையை சேமிப்பு கணக்கிலும் வைத்திருக்கலாம். மியூச்சுவல் பண்டில் பரிட்சயம் உள்ளவர்கள், லிக்விட் பண்ட் வகை நிதியிலும் அவசர கால நிதியை முதலீடு செய்யலாம்.குறுகிய கால முதிர்வு கொண்ட நிதி சாதனங்களில் முதலீடு செய்யும் லிக்விட் பண்ட், அவசர கால நிதி முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|