பதிவு செய்த நாள்
25 ஏப்2021
19:12
வீட்டுக் கடன் என்பது நீண்ட கால பொறுப்பாகும். வீட்டுக் கடன் பெற்றவர்கள், கடனுக்கான மாதத் தவணையை தவறாமல் செலுத்தி வர வேண்டும். வாய்ப்பிருந்தால், கடனை முன்கூட்டியே அடைப்பதற்கும் திட்டமிடலாம். எனினும், எதிர்பாராத காரணங்களால், இடையே மாதத் தவணையை செலுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.
அதிலும், கொரோனா பாதிப்பு நிலவும் தற்போதைய சிக்கலான சூழலில் இதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, மாதத் தவணையை தவறவிடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்திருப்பது அவசியம்.
தாமத கட்டணம்:
கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் போவதால், பலவிதமான பாதிப்புகள் ஏற்படலாம். கடன் தவணை தவறியதற்காக தாமத கட்டணம், அபராதம் மற்றும் அபராத வட்டியும் விதிக்கப்படலாம். அபராதம் என்பது மாதத் தவணை தொகையில், 1 முதல் 2 சதவீதமாக இருக்கலாம்.
அபராத வட்டி:
சூழ்நிலைக்கு ஏற்ப, சில நேரங்களில் கடன் தவணை தவறும் காலத்தில், நிலுவையில் உள்ள முழு தொகைக்குமான அபராத வட்டியை செலுத்த வேண்டியிருக்கலாம். தாமத கட்டணம் தவிர இந்த அபராதம் அமையும் என்பதால், இந்த தொகை கணிசமாகவும் அமையலாம்.
கிரெடிட் ஸ்கோர்:
தவணையை தவறவிடுவதால், கடன் தகுதியை தீர்மானிக்க உதவும் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும். ஒரு முறை தவணையை செலுத்தாமல் இருப்பது, கடன் ஸ்கோரில், 70 புள்ளிகள் வரை பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இது பாதிக்கும்.
கால அவகாசம்:
ஒரு மாத தவணையை செலுத்த முடியாமல் போனாலும், அடுத்த மாதம் செலுத்தி விட வேண்டும். ஏனெனில், கடைசியாக தவணை செலுத்திய பின், 90 நாட்களுக்குள் அடுத்த தவணையை செலுத்திவிட்டால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இல்லை எனில், கடன் கணக்கு வாராக்கடனாக கருதப்படும்.
தீர்வு என்ன?
வாராக்கடனாக கருதப்படுவதன் பாதிப்பு தீவிரமாக அமையலாம். எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. நிதி நெருக்கடி இருந்தால் வங்கியை அணுகி, நிலைமையை விளக்கிக் கூறி, கடன் காலம் நீட்டிப்பு உள்ளிட்ட தீர்வை நாடலாம். கடனை வசூலிக்க, ஏலம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை வங்கி கையாளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|