பதிவு செய்த நாள்
26 ஏப்2021
00:05
கலியன் சம்பத்து, வாட்ஸ் ஆப்.
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் போடலாம்?
தனிநபர், 4.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். கூட்டு கணக்காக இருந்தால், 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். தற்போது இந்த முதலீட்டுக்கு, 6.6 சதவீத வட்டி கிடைத்து வருகிறது. வங்கி வட்டியைவிட சற்று அதிகம் தான். அதாவது, 9 லட்சம் ரூபாய்க்கு ஆண்டு ஒன்றுக்கு, 59,400 ரூபாய் வட்டி கிடைக்கும். பன்னிரெண்டால் வகுத்தால், மாதந்தோறும் 4,950 ரூபாய் கிடைக்கும். ஆனால், இத்திட்டத்தில் உங்கள் முதலீடு, 5 ஆண்டுகள், ‘லாக் இன்’ ஆகியிருக்கும் என்பது ஞாபகமிருக்கட்டும்.
கவிதா பாலாஜி, சென்னை.
நான் இரண்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளேன். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைப்பது சரியல்ல என்று சிலர் எனக்கு அறிவுறுத்துகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைப்பது தவறா?
சட்டப்படி தவறு இல்லை. ஓர் இந்தியக் குடிமகன் எத்தனை வங்கிக் கணக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்னை வேறு இடத்தில். ஒவ்வொரு வங்கியிலும், 5 ஆயிரம் ரூபாயாவது, ‘மினிமம் பேலன்ஸ்’ வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால், அபராதம் உண்டு. பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், வங்கி வழங்கும் டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின் எண், நெட் பேங்கிங் கடவுச் சொல் ஆகியவற்றை ஞாபகம் வைத்துக் கொள்வது பெரிய இம்சை. இரண்டு கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஒன்று சம்பள கணக்கு. இன்னொன்று உங்கள் கணவரோடு/மனைவியோடு இருக்கும் நிரந்தரக் கணக்கு.
எஸ். பாலபாரதி, சென்னை.பாரி, சென்னை.
என் மகள் கருவுற்று நான்கு மாதங்கள் ஆகின்றன. அவளது பிரசவ செலவுகளுக்கு, இப்போது இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க முடியுமா?
உடனே எடுத்து, உடனே பயன்படுத்த முடியாது. இந்தியாவில் பல்வேறு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், பிரசவ செலவுகளை உள்ளடக்கிய மருத்துவ காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்கின்றன. ஆனால், அவற்றில், ‘காத்திருப்பு காலம்’ என்ற அம்சம் உண்டு. 2 ஆண்டுகள் முதல், 6 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுடன், ‘கூடுதல்’ வசதியாகத் தான் பிரசவ காப்பீடு வழங்கப்படும் என்பதால், பிரீமியம் தொகையும் அதிகமாகவே இருக்கும்.
எஸ்.பாலபாரதி, சென்னை
மூன்று பேர் கொண்ட என் குடும்பத்துக்கு, 3 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ பாலிசி வைத்திருக்கிறேன். இதன் அளவை கூட்ட முடியுமா? அல்லது தனி பாலிசி எடுக்க வேண்டுமா?
பாலிசியை புதுப்பிக்கும்போது, காப்பீட்டு தொகையை உயர்த்திக் கொள்ளலாம் அல்லது சூப்பர் டாப்-அப் பிளான் வாங்கிக் கொள்ளலாம் அல்லது இன்னொரு காப்பீட்டு நிறுவனத்துக்கு உங்கள் பாலிசியை மாற்றிக் கொள்ளும்போது, அங்கே காப்பீட்டு தொகையை உயர்த்திக் கொள்ளலாம். 3 பேருக்கு, 3 லட்சம் ரூபாய் பாலிசி என்பது மிக மிகக் குறைவு. உயர்ந்து வரும் மருத்துவ கட்டணங்களையும், பல்வேறு நோய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும்போது, 20 லட்சம் ரூபாய்க்கேனும் நீங்கள் மருத்துவ பாலிசி வைத்திருப்பது எதிர்காலத்துக்கு நல்லது.
ப.கோபி பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
‘அடல் பென்ஷன்’ திட்டத்தில் அரசு ஊழியர்கள் சேரலாமா?
சேரலாம். 18 முதல், 40 வயதுக்குள், வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ள, அலைபேசி வைத்திருக்கக்கூடிய இந்தியக் குடிமகன் சேரலாம். இத்திட்டம் துவக்கப்பட்ட, 2015ல் தான் அரசாங்கத்தின், 50 சதவீத இணை பங்களிப்பு இருந்தது; இப்போது இல்லை. 20 ஆண்டுகள் பங்களிப்பு செய்து வந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்துக்கு ஏற்ப, 1,000 – 5,000 ரூபாய் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை நீங்கள், 60 வயதுக்கு பின் பெறலாம்.
மோகன் பாண்டியன், ‘இ – மெயில்’
எனக்கு வயது, 34, மனைவிக்கு, 25. 5 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் குடும்பத்துக்கு நான் என்ன மருத்துவ பாலிசி எடுப்பது?
உங்கள் வயது, உங்கள் மனைவி, பிள்ளைகளின் வயதைப் பார்க்கும்போது, தொலைநோக்கு பார்வையோடு, 25 முதல், 30 ஆண்டுகள் கழித்து என்ன ஆகும் என்று நீங்கள் திட்டமிடுவது அவசியம். மருத்துவ துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கான கட்டணங்களும் உயர்ந்திருக்கும். 5.5 சதவீத பணவீக்கத்தையும் மனதில் வைத்துக் கொண்டு கணக்கிடுங்கள். குறைந்தபட்சம் உங்கள் நான்கு பேருக்கு, 40 லட்சம் ரூபாய் அளவுக்கு மருத்துவ பாலிசி எடுத்துக் கொள்வது எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும்.
ராஜவடிவேலு, ‘இ – மெயில்’
எனக்கு வயது, 59. வட்டியைத் தவிர வேறு வருவாய் எனக்கு இல்லை. 2.5 லட்சம் ரூபாய்க்குள் தான் ஆண்டு வட்டி வருவாய் உள்ளது. நான் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
வேண்டாம். ஆனால், செலுத்துவதற்கு வரி ஏதும் இல்லை என்பதை சொல்லும், ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்வது வேறு சில பலன்களை கொடுக்கும். உதாரணமாக, வங்கிக் கடன் கேட்கும்போதும், ஏதேனும், ‘ரீபண்டு’ கோரும்போதும், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய விசா கோரும்போதும், வருமான வரி தாக்கல் செய்த படிவம் கேட்கப்படும். இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம் என்றால், ப்ரீயா விடுங்க, ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.
குரன்ஜி, மின்னஞ்சல்.
ஒரு சில தனியார் நிறுவனங்களின், ‘பிக்சட் டிபாசிட்’ திட்டங்களுக்கு, எம்.ஏ.ஏ.ஏ., கிரெடிட் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளதே. நம்பி முதலீடு செய்யலாமா?
தரநிர்ணய நிறுவனங்கள் பல சமயங்களில் கோட்டை விட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேசமயம், டிபாசிட் கோரும் நிறுவனங்களின் பொருளாதார பலத்தை புரிந்து கொள்ள, கிரெடிட் ரேட்டிங்குகளைவிட வேறு பெரிய வாய்ப்பும் இல்லை. அதிகபட்ச ரேட்டிங் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்தாலும், ஓராண்டு, ஈராண்டுக்கு மேல் உங்கள் பணத்தை வைத்திருக்க வேண்டாம்.
அதேபோல், வங்கி வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு, மியூச்சுவல் பண்டு, கம்பெனி பிக்சட் டிபாசிட் ஆகிய இனங்களில் பணத்தைப் பரவலாக முதலீடு செய்து, ரிஸ்கை குறைத்துக் கொள்ளவும் தவற வேண்டாம்.--
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ- – மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம். அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|