பதிவு செய்த நாள்
03 மே2021
00:11
என் மகள் பிறப்பால் அமெரிக்க குடிமகள். ஆறு வயது ஆகிறது. தற்போது இந்தியாவில் வாழும் எங்களால், அவள் எதிர்காலத்துக்கான சேமிப்பு கணக்கை எங்கும் ஆரம்பிக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
கவுரி கோபாலகிருஷ்ணன், பெங்களூரு.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பெடரல் வங்கி, ஐ.டி.எப்.சி., ஃபர்ஸ்ட் வங்கி ஆகியவற்றில், என்.ஆர்.ஐ., மைனர்களுக்கான சேமிப்புக் கணக்குகளைத் துவங்க முடியும். அதற்கு அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் இதர ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும்வரை, அவர்களுடைய கணக்குகளை பெற்றோரோ, ‘கார்டியனோ’ தான் பராமரிக்க வேண்டியிருக்கும்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இருப்போர் குடும்பத்தில் அரசுப் பணி, ஆசிரியர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு வருமானவரி செலுத்துவதில் சலுகைகள் உண்டா?
சி.கண்ணன், வத்தலக்குண்டு.
உண்டு. வருமான வரி பிரிவு, ‘80 U’ மற்றும் ‘80 DD’ என்ற இரு பிரிவுகள் இதற்கு உதவும். மாற்றுத் திறனாளிகள், ‘80 U’இன் கீழ் விலக்கு பெற முடியும். மாற்றுத் திறனாளிகளைப் பராமரிக்கும் குடும்ப உறுப்பினர் ‘80 DD’ன் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும். மேலும், 40 சதவீதம் முதல், 80 சதவீத ஊனம் இருந்தால், 75,000 ரூபாய் வரையும், 80 சதவீத ஊனத்துக்கு மேல் இருந்தால், 1.25 லட்சம் ரூபாய் வரையும் வருமான வரி விலக்கு கோரலாம். ‘80 U’ மற்றும் ‘80 DD’ இரண்டையும் ஒரே குடும்பத்தில் கோர முடியாது. ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் தான் இதனைப் பயன்படுத்த முடியும்.
‘கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ்’ எனும் மூலதன ஆதாய வரி பற்றிய முழு விளக்கம் தேவை. 30 வருஷத்துக்கு முன் வாங்கிய பிளாட்டை, இப்போது, 30 லட்சத்துக்கு விற்றால், வரி எவ்வளவு வரும்? ரியல் எஸ்டேட்டில் மீண்டும் மறு முதலீடு செய்யலாமா? அல்லது மூலதன ஆதாயத்தைத் தவிர்க்க தனியாக ஏதேனும் டெபாசிட் உண்டா?
ஜனனி ரமேஷ், சென்னை.
எவ்வளவு ரூபாய்க்கு அப்போது நீங்கள் பிளாட்டை வாங்கினீர்கள் என்று குறிப்பிடவில்லை. தோராயமாக, 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கினீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 30 – 5 = 25 லட்சம் ரூபாய். அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒவ்வோராண்டுக்கும் ‘பணவீக்க குறியீட்டெண்’ என்று ஒன்று உண்டு. இதை நீங்கள் வருமான வரித் துறையின் வலைத்தளத்தில் பார்க்கலாம். இந்தப் பணவீக்கக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு, பிளாட்டின் தற்போதைய விலையை இப்படிக் கணக்கிட வேண்டும். விற்ற ஆண்டின் பணவீக்கக் குறியீடு / வாங்கிய ஆண்டின் பணவீக்கக் குறியீடு X வாங்கிய விலை. மேலும், மூலதன ஆதாய வரியை மிச்சப்படுத்த பல வழிகள் உண்டு. வீட்டை விற்ற முழுத் தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. லாபத்தை மட்டும் மறுமுதலீடு செய்தால் போதும்.
எஸ்.பி.ஐ.,யில் இருந்து நான் விண்ணப்பிக்காமலே எனக்கு கிரெடிட் கார்டு அனுப்பி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த கார்டை நான் பயன்படுத்தவில்லை. அதற்குரிய ரகசிய எண்கூட பெறவில்லை. பயன்படுத்தாத கார்டுக்கு பணம் கட்டச்சொல்லி செய்தி வந்துள்ளது. இதற்கு என்ன செய்வது?
நாகராஜன், வாட்ஸ் ஆப்
முதலில் பயப்பட வேண்டாம். இந்திய ரிசர்வ் வங்கி இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் கோராமல் கிரெடிட் கார்டு வழங்கி, அதற்குக் கட்டணமும் விதிக்கப்பட்டால், அந்த வங்கி அதற்கு உரிய பரிகாரத்தை வழங்க வேண்டும். அதாவது, ரிவர்ஸ் செய்யப்படும் கட்டணத்தைப் போன்று இருமடங்கு தொகையை அந்தப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும். முதலில், அந்த வங்கியின் நோடல் ஆபீசருக்கு மேற்கண்ட விபரங்களைத் தெரிவித்து கடிதம் எழுதுங்கள். 4 வாரங்களில் அவர்கள் உரிய தீர்வு அளிக்கவில்லை என்றால், வங்கித் துறை தீர்ப்பாணையரிடம் புகார் அளியுங்கள்.
மியூச்சுவல் பண்டுகளில் இப்போது முதலீடு செய்யலாமா?
பிரபுசங்கர், சென்னை.
எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதாவது, பங்குச் சந்தை சரியும்போது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தால், நல்ல விலையில் யூனிட்டுகள் கிடைக்கும் என்றெல்லாம் காத்திருப்பது ஒருவித மயக்கம். அப்படியெல்லாம் மிகச் சரியாக காலநேரம் பார்த்து முதலீடு செய்ய முடியாது. பங்குச் சந்தையில் ஏற்றமோ, இறக்கமோ, நீண்ட கால முதலீட்டு நோக்கத்தோடு, மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் பணத்தைப் போட்டுக் கொண்டே வாருங்கள். அது, அடுத்த, 5 ஆண்டுகள் வழங்கும் ரிட்டர்னைக் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.
ரிசர்வ் வங்கி தற்போதைய கொரோனா இரண்டாம் அலையைக் கருத்தில் கொண்டு, கடன் ஒத்தி வைப்பை மீண்டும் அறிமுகம் செய்யுமா?
ஸ்ரீனிவாச ராஜா, வாட்ஸ் ஆப்.
வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு, நாடு முழுதும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்தன. வேலைவாய்ப்புகள் பறிபோயின. இம்முறை அத்தகைய ஊரடங்கு இல்லை. இருப்பவை, மாவட்ட மட்டத்திலான கட்டுப்பாடுகள் மட்டுமே, அதனால், கடன் ஒத்தி வைப்பை வழங்க வாய்ப்பில்லை என்றே நிதித் துறையைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். மேலும், ஏற்கனவே வழங்கிய கடன் ஒத்திவைப்பு விஷயத்தில், கூட்டு வட்டியை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யச் சொல்லிவிட்டதால், வங்கிகள் நஷ்டத்தில் தவிப்பதாகவும் செய்தி. அவற்றால் இன்னொரு கடன் ஒத்தி வைப்பைத் தாங்க முடியாது என்பது வங்கித் துறைத் தலைவர்களின் கருத்து.
ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டில், மாதம் நேரடியாக பணத்தைச் செலுத்துகிறேன். சேவைக் கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட பணம் சேர்த்து கட்டச்சொல்வது சரியா?
ஜானகிராம், கோவை.
இதில் சரியா, சரியில்லையா என்றெல்லாம் முடிவெடுக்கும் இடத்தில் நாம் இல்லை. காப்பீட்டு நிர்வாகம் மற்றும் யூனிட்டுகளை வழங்கும் செலவுகள், இறப்புவிகித செலவு, பண்டு நிர்வாக செலவு ஆகிய செலவுகளை ஈடுசெய்வதற்கே சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தரமான சேவையைக் கோருவது மட்டுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு உரிய சிறிய தொகையை அளிப்பது என்பது, அத்துறை திறம்பட பணியாற்றுவதற்கு நாம் செய்யும் பங்களிப்பாகக் கருதுவதே சரி.ஆயிரம் சந்தேகங்கள் 3----
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம். அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|