பதிவு செய்த நாள்
05 மே2021
21:03
ஸ்டெல்லான்டிஸ் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக், இந்தியா மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்திற்குள், தனது செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக முக்கிய தலைமை நிர்வாகிகள் நியமனம் குறித்து அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கார்ல் ஸ்மைலி புதிய நிர்வாகிகளின் நியமனங்கள் குறித்து அறிவித்தார்.
அதன்படி, ரோலண்ட் பசாரா இந்தியாவில் ஸ்டெல்லான்டிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டிலிருந்து, ரோலண்ட் இப்பிராண்ட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த துணைத்தலைவராக சிட்ரோய்ன் இந்தியா செயல்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்தியிருக்கிறார். சிட்ரோய்ன் பிராண்டின் சமீபத்திய அறிமுகம் மற்றும் இந்தியாவில் அதன் முதல் தயாரிப்பான சிட்ரோய்ன் சி5 ஏர்க்ராஸ் -ன் உற்பத்தி முதல் விற்பனை வரையிலான அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இவர் ஜீப் மற்றும் சிட்ரோய்ன் ஆகியவற்றின் தேசிய விற்பனை நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கான முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்பொறுப்புடன் இக்குழுமத்தின் உற்பத்தி செயல்பாடுகளையும் கவனித்து கொள்வார்.
மேலும், டாக்டர் பார்த்தா தத்தா இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பொறியியல், வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் & டி) செயல்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். 2019 முதல் டாக்டர் பார்த்தா, எஃப்சிஏ இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முன்னெடுத்து வழிநடத்தியிருக்கிறார். அப்போது அவரது தலைமையில் புதிய ஜீப் காம்பஸ் மற்றும் உள்நாட்டிலேயே ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்ட ஜீப் ராங்கலர் ஆகியன வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன. டாக்டர் பார்த்தா 1999ம் ஆண்டு எஃப்.சி.ஏ நிறுவனத்தில் பொறியாளராக சேர்ந்தார்.
கடந்த இருபது ஆண்டுகளில், சர்வதேச தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள், நிர்வாகம், வணிக மேம்பாட்டுத் திட்டங்கள், பொறியியல் மற்றும் வாகன ஒருங்கிணைப்பு ஆகிய பிரிவுகளில் மூத்த தலைமை நிர்வாக பதவிகளில் பணியாற்றியுள்ளார். எஃப்.சி.ஏ.யில் அவர் பணிபுரிந்த காலத்தில், சென்னை மற்றும் புனேவில் உள்ள தொழில்நுட்ப மையங்களின் இயக்குநராகவும், சீனாவில் தயாரிப்பு பொறியியல் பிரிவு தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டு இருக்கிறார்.
புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கார்ல் ஸ்மைலி கூறுகையில், "திறமை வாய்ந்த சர்வதேச விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் நிர்வாகியான ரோலண்ட், இந்தியாவில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக தனது புதிய பொறுப்பிற்கு ஆழ்ந்த வணிக அனுபவத்தின் அனுபவ வளத்தைக் கொண்டு வந்திருக்கிறார். இந்தியா, உலகளவில் எங்களது நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி சந்தையாக இருப்பதால் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் ஜீப் பிராண்டின் உள்ளூர் மயமாக்கப்பட்ட தயாரிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதில் டாக்டர் பார்த்தா முக்கிய பங்கு வகித்தார். மேலும் இப்பிராந்தியத்திற்கான தயாரிப்பு செயல்பாட்டு யுக்தியை செயல்படுத்தும் குழுவிற்கு இவர் தலைமையேற்று வழிநடத்துவார். மேலும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு செயல்படுத்துவார்” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|