பதிவு செய்த நாள்
06 மே2021
20:15
புதுடில்லி:கொரோனா பிரச்னையால், மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கும் திட்டத்தை, பல நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் கொரோனா பிரச்னையால், அலுவலகம் அல்லது வீட்டில் இருந்து பணியாற்றுவோர், பல வகையில் நெருக்கடிக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
அச்சம்
வீட்டில் பணியாற்றுவதில் சிலருக்கு சங்கடங்கள் உள்ளன. அதுபோல, அலுவலகம் செல்லும் பலர், கொரோனா அச்சம் காரணமாக, மன அழுத்தத்துடன் வேலை பார்ப்பதாக, ஆய்வொன்று தெரிவிக்கிறது.இத்தகைய சூழலில், ஊழியர்கள் புத்துணர்வு பெறவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மும்பையைச் சேர்ந்த, கோத்ரெஜ் புராப்பர்ட்டீஸ் நிறுவனம், ஐந்து நாட்களுக்கு அலுவலகத்தை மூடி, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், ‘சுய அக்கறை தினம்’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு இன்று விடுப்பு வழங்கியுள்ளது.
அத்துடன், பிறரை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ், ஜூன் இறுதிக்குள், விடுப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்து உள்ளது.டில்லியைச் சேர்ந்த, ரெப்இந்தியா நிறுவனம், மே, 6 – 9ம் தேதி வரை, ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கி உள்ளது.
விடுப்பு
ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும், தடுப்பூசி போட்டு கொள்ளவும், இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனமான, தஸ்ரா, ஏப்., 26 முதல் வரும், 9ம் தேதி வரை, 14 நாட்களுக்கு விடுப்பு வழங்கியுள்ளது. உடனடியாக பணிகளை நிறுத்தி, தங்கள் நலனையும், குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளுமாறு, இந்நிறுவனம், ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இதுபோல, பல நிறுவனங்கள், ஊதியத்துடன் விடுப்பு அளிப்பது, ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் சலுகை
கூகுள் நிறுவனத்தில், 1 லட்சத்து, 39 ஆயிரத்து, 995 பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவில், 4 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம், வாரத்தில், மூன்று நாட்கள் அலுவலகத்திலும், இரண்டு நாட்கள், தங்களுக்கு பிடித்தமான இடத்திலும் பணியாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது. ‘‘அவரவர் வேலையின் தன்மைக்கேற்ப, வீடு, அலுவலகம் அல்லது வெளியிடங்களில் பணியாற்றலாம்,’’ என, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|