பதிவு செய்த நாள்
08 மே2021
20:38
புதுடில்லி:நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலில், வாடிக்கையாளார்கள் வங்கிக்கு நேரடியாக வராமல், அதன் சேவைகளை பெற உதவும் வகையில், பொதுத்துறை வங்கிகள் பல சேர்ந்து, ஒரு நிறுவனத்தை புதிதாக ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளன.
பொதுத்துறை வங்கிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கும் இந்த நிறுவனத்தின் வாயிலாக, வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளை, அலுவலகம் அல்லது வீட்டு வாசலிலேயே பெற முடியும்.இதற்காக கிட்டத்தட்ட, 12 பொதுத்துறை வங்கிகள் கை கோர்க்கின்றன. இந்த புதிய நிறுவனத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கியின் நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை, வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ள முடியும்.
பே ஆர்டர்
‘பி.எஸ்.பி., அலையன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய நிறுவனத்தின், தலைமைச் செயல் அதிகாரியாக, பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை பொது மேலாளரும், ரிலையன்ஸ் ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் துணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜீந்தர் மிராகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய நிறுவனம் குறித்து அவர் கூறியதாவது:தற்போது ஒவ்வொரு வங்கியும் தனித் தனியாக இந்த சேவைகளை வழங்கி வருகின்றன. இனி கூடுதல் சேவைகளை, குறைந்த செலவில், அனைத்து வங்கிகளும் இந்த நிறுவனத்தின் வாயிலாக வழங்க இயலும்.தற்போது காசோலைகளை வந்து வாங்கிச் செல்வது, வரி சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், டிஜிட்டல் லைப் சான்றிதழ்கள், பே ஆர்டர்கள் என, 11 விதமான நிதிசாரா சேவைகளை இந்த நிறுவனம் வாயிலாக வழங்க முடியும்.
தொலைபேசி
நிதி சார்ந்த சேவை எனும்பட்சத்தில், பணத்தை எடுப்பது மட்டுமே இப்போது உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை பெற இணையதளம், மொபைல் செயலி, அல்லது தொலைபேசி வாயிலாக அணுகலாம். இதற்கு ஒரு முறை கடவு எண் பெற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும்.இருப்பினும், இந்த புதிய வணிக மாடலை இன்னும் இறுதி செய்யவில்லை.
தொழில்நுட்பம் மற்றும் மனித வளம் ஆகியவற்றுக்கு பிறருடன் இணைந்து செயல்படுவதா; அல்லது, பிரத்யேகமாக ஏற்படுத்திக் கொள்வதா என்பது குறித்த முடிவுகள் எல்லாம் எடுக்கப்பட வேண்டியுள்ளது.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.வீட்டு வாசலுக்கு வந்து வழங்கப்படும் இந்த சேவைகளை பெற வாடிக்கையாளர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
இந்த சேவைகளை பெறுவதற்காக, ஒவ்வொரு சேவைக்கும், ஜி.எஸ்.டி., சேர்த்து, மொத்தம், 88 ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த கட்டணம் வங்கிக்கும், சேவையை நிறைவேற்று பவருக்கும் பிரித்து வழங்கப்படும். இந்த புதிய கூட்டு முயற்சி எப்படி பலனளிக்கும் என்பது இனி தான் தெரியவரும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|