பதிவு செய்த நாள்
21 மே2021
19:24
புதுடில்லி:பிட்காய்ன் விலை சரிவு மற்றும், அது தொடர்பான குழப்பங்கள் காரணமாக, ‘பேடிஎம் பேமென்ட் பேங்க்’, மெய்நிகர் நாணய சந்தைகளுடனான உறவைத் துண்டித்துக் கொண்டுள்ளது.
மெய்நிகர் நாணயங்களை வாங்குவது அல்லது விற்பதை நேற்று முதல் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. மெய்நிகர் நாணயங்களுக்கான சந்தைகளுடன் உள்ள உறவை மறுபரிசீலனை செய்யுமாறு, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமற்ற முறையில் அண்மையில் வங்கிகளை கேட்டுக்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வார துவக்கத்தில் பல வங்கிகள், மெய்நிகர் நாணய சந்தைகளுடனான தொடர்பிலிருந்து வெளியேறின.இந்நிலையில், பேடிஎம் பேமென்ட் பேங்க் நிறுவனமும், அதன் தளத்தை பயன்படுத்தி, மெய்நிகர் நாணயங்களை வாங்குவது அல்லது விற்பதை நேற்று முதல் அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. மேலும், மெய்நிகர் நாணய சந்தைகளுடனான உறவுகளையும் அது துண்டித்துக் கொண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பேடிஎம் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான, ‘பேபால்’ நிறுவனமும், மெய்நிகர் நாணய சந்தைகளின் தொடர்பிலிருந்து வெளியேறிவிடும் என தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பின்னணியில் ஏற்கனவே, ஜெப்பே, வாஜிர்எக்ஸ் பையுகாய்ன் போன்ற பல மெய்நிகர் நாணய சந்தைகளிலிருந்து, பல வங்கிகள் வெளியேறிவிட்டன.
பேடிஎம் பேமென்ட் பேங்க் என்ன காரணத்தினால் மெய்நிகர் நாணய சந்தைகளிலிருந்து வெளியேறியது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.இப்படி, பல வங்கிகள் வெளியேறியதை அடுத்து, மெய்நிகர் நாணய சந்தைகள், இந்திய முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெறுவதற்கான வாய்ப்பு வசதிகள் குறைந்துவிட்டன.
பிட்காய்ன் மீதான முதலீட்டை, ‘டெஸ்லா’ நிறுவனம் திரும்ப பெற்றது, சீனாவின் தடை போன்ற பல்வேறு காரணங்களால், மெய்நிகர் நாணயங்களின் விலைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவில் செயல்படும் வங்கிகள், மெய்நிகர் நாணய சந்தைகளிலிருந்து வெளியேறி வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|