பதிவு செய்த நாள்
24 மே2021
00:09

நான் கொடுத்த, ‘செக்’ திரும்பிவிட்டது. வங்கியை கேட்டதற்கு, ‘சர்வர்’ காரணமாக இருக்கலாம் என்றனர். அதே செக், மூன்று தினம் கழித்து, ‘பாஸ்’ செய்யப்பட்டது. செக் திரும்பியதற்கு என் கணக்கில் 295 ரூபாயை பிடித்தம் செய்துள்ளனர். நான் யாருக்கு இது பற்றி தகவல் தர வேண்டும்?
எம்.சிவராமகிருஷ்ணன், அண்ணா நகர், சென்னை.
இந்திய ரிசர்வ் வங்கியின், மே 7, 2013 தேதியிட்ட அறிவிக்கை எண் RBI/2012-13/493 இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது. ‘கனெக்டிவிட்டி பெயிலியர்’ என்பது வாடிக்கையாளர் குற்றமில்லை. அதனால், பிடித்தம் செய்யப்பட்ட தொகை திரும்ப வழங்கப்பட வேண்டும் என்கிறது இந்த அறிவிக்கை. இதை குறிப்பிட்டு, வங்கிக்கு கடிதம் எழுதுங்கள்; இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவியுங்கள்.
என் மாமனார் ஒரு வீட்டுடன் கூடிய மனை வைத்திருந்தார். 2012ம் ஆண்டு காலமான போது, உயில் எதுவும் விட்டு செல்லவில்லை. இந்தச் சொத்திற்கு அவருடைய மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் வாரிசுகள். இந்நால்வரில் மகன் மட்டும், அம்மாவை விட்டு விட்டு எங்கோ வசிக்க சென்றுவிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தாய், பெரிய மகளின் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அச்சொத்தை நான்காக பிரித்து, ஒரு பாகம் மட்டும் மகனுக்கு சேரும் வகையில் வைத்து விட்டு, மீதியை மற்ற மூவர் விற்கவோ, அனுபவிக்கவோ இயலுமா?
த.சொக்கலிங்கம், வில்லிவாக்கம், சென்னை.
மாமனார் மறைந்து போனதால், அவரது சொத்துக்களின் முழு உரிமை உங்கள் மாமியாருக்கே உண்டு. ஆகையால், உங்கள் மாமியார் ஓர் உயில் எழுதி, அதில் மகனுக்கும், இரண்டு மகள்களுக்கும் சொத்தை சமமாகப் பிரித்துக் கொடுக்கலாம். உங்களது மைத்துனர் காணாமல் போய், ஒன்பது ஆண்டுகள் தான் ஆகின்றன. கடந்த, 1963ம் ஆண்டின் காலவரையறை சட்டத்தின் படி, இது போன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் மைத்துனர் தன் அப்பாவின் சொத்தில் உரிமை கோர, 12 ஆண்டுகள் வரை வாய்ப்பு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின், மைத்துனர் வராவிடில், உங்கள் மாமியார், வேறு ஓர் உயிர் எழுதி வைக்கலாம்.
வங்கி கணக்கை முடித்துக்கொள்ள, அதிலுள்ள பணத்தை முழுவதும் எடுத்து விட்டு இயக்காமல் விட்டுவிடலாம் அல்லவா?
தேவராஜன், பீளமேடு.
இது முறையான வழியில்லை. ஏனெனில், உங்கள் வங்கிக் கணக்கைப் பராமரிப்பதற்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும். நீங்கள் வங்கிக் கணக்கை இயக்காமல் விட்டுவிட்டால், இந்த இருப்புத் தொகையை வைக்காமல் போனதற்காக அபராதம் விதிக்கப்படும். அது ஒவ்வொரு ஆண்டும் குட்டி போட்டுக் கொண்டே போகும்.
அதைவிட, உரிய வங்கிக் கிளைக்கே சென்று, கணக்கை முடித்துக் கொள்வதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்து, மிச்சமிருக்கும் காசோலைகள், ‘டெபிட் கார்டு’ ஆகியவற்றை ஒப்படைத்து விடுங்கள். கணக்கை முடிப்பதற்கு ஒரு சில வங்கிகள், 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. அதையும் செலுத்திவிடுவதே, பிரச்னைகள் இல்லாமல் விலகுவதற்கு வழி.
நான் பி.எஸ்.இ., ஸ்டார் மியூச்சுவல் பண்டு மூலமாக, எஸ்.ஐ.பி.,யில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகள் என்ன?
பிரேம்குமார், பெருங்குடி, சென்னை.
பி.எஸ்.இ., ஸ்டார் மியூச்சுவல் பண்டில் பங்கேற்க, அனுமதி பெற்ற மும்பை பங்குச் சந்தை உறுப்பினர் மூலமாக நீங்கள் முதலீடு செய்யலாம். எல்லா மும்பை பங்குச் சந்தை உறுப்பினரும் இந்த வசதியைப் பயன்படுத்த அனுமதி பெற்றிருக்க வாய்ப்பில்லை. உங்களுக்குத் தெரிந்த பங்குச் சந்தை முகவரிடம் விசாரித்து, யார் அனுமதி பெற்றவர் என்பதை தெரிந்து கொள்ளவும்.
வீட்டுக் கடன் நிறுவனம் ஒன்றில், வீட்டு அடமானக் கடன் பெற்றுள்ளேன். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, வீட்டுக் கடனுக்கான வட்டியை கணக்கு காண்பித்து விலக்கு பெறுவது போல், வீட்டு அடமான கடனுக்கும் விலக்கு பெறலாமா?
சே.சரவணச்செல்வன், ராஜபாளையம்.
இல்லை, அதற்கான வாய்ப்பில்லை. ஆனால், அடமானக் கடன் தொகையைத் தாங்கள் ஏதேனும் தொழில் முயற்சிக்கோ அல்லது இன்னொரு வீடு அல்லது சொத்து வாங்குவதற்கோ பயன்படுத்தியிருந்தால், வருமான வரிச் சட்டப் பிரிவுகள் 37 (1) மற்றும் 24 (பி) ஆகியவற்றின் கீழ், ஒரு சில வரிச் சலுகைகளை கோர முடியும்.
மகள் படிப்புக்காக, 1.2 லட்சம் ரூபாய் கல்விக் கடன், வங்கி கிளையில் பெற்றேன். நாளது தேதி வரையில், 96 ஆயிரத்து, 635 ரூபாய் ரொக்கமாக செலுத்தி உள்ளேன். அக்காலங்களில் மத்திய அரசு வட்டி மானியமாக, கடனுக்கு 88 ஆயிரத்து, 180 ரூபாயை பெற்று உள்ளது, வங்கி. ஆனால், வரவு வைக்காமல் நிலுவையாக வைத்துள்ளது. பெற்ற கடனுக்கு செலுத்தியது போக மீதம், 64 ஆயிரத்து, 815 ரூபாயை வங்கி எனக்கு தர வேண்டியதுள்ளது. இது குறித்து கிளை மேலாளர், துணை மேலாளர் மற்றும் பொது மேலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பத்திரம் மற்றும் என்.ஓ.சி.,யும் கொடுக்கப்படவில்லை. என்ன செய்வது?
ஜி.ராமச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்துார்.
இந்திய ரிசர்வ் வங்கியின், தமிழ்நாடு வங்கி துறை தீர்வாணையரை, cms.bochennai@rbi.org.inல் அணுகுங்கள் அல்லது இந்திய அரசாங்கத்தின் பொதுமக்கள் குறைதீர்வு வலைதளத்தில், https://pgportal.gov.in/ புகார் அளியுங்கள். இது பிரதமர் அலுவலக கவனத்துக்கே செல்வதால், உங்களுக்குப் பதில் கிடைக்கும்.
***வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ – -மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம். அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|