பதிவு செய்த நாள்
26 மே2021
21:36
சென்னை:கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை தவிர்த்து, பிற கிளைகளில் காசோலை வாயிலாக பணம் எடுக்கும் வரம்பை, இரு மடங்காக உயர்த்தி, பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
அவசர தேவைக்காக பணம் அதிகம் தேவைப்படும் நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக, கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடும். இதனால், எஸ்.பி.ஐ., வங்கியில், பிற கிளைகளிலிருந்து காசோலை வாயிலாக பணம் எடுப்பதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போது எஸ்.பி.ஐ.,யில் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையை தவிர்த்து, பிற கிளைகளில், காசோலை வாயிலாக, 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும். இந்த வரம்பு தற்போது, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்து மடங்கு
இதே போல, காசோலை இல்லாமல், விண்ணப்பம் வாயிலாக எடுக்கும் வரம்பு, ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டு, 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதே போல, மூன்றாம் நபருக்கு வழங்கும் காசோலையை, கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது, பிற கிளையில், 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும்.
இதே போல கணக்கு வைத்திருக்கும் கிளையிலும், பணம் எடுக்கும் தொகை, 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதி, வரும் செப்டம்பர் இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.புதிய கட்டணம்எஸ்.பி.ஐ.,யில் நான்கு முறை வரை, வங்கியிலோ அல்லது ஏ.டி.எம்., வாயிலாகவோ கட்டணம் ஏதுமின்றி பணம் எடுக்கலாம். அதன்பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும், 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்யப்படும்.
இந்த கட்டணம், இதற்கு முன், 20 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி.,யாக இருந்தது.மேலும், அடிப்படை சேமிப்பு வைப்பு தொகை கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நிதி ஆண்டுக்கு, 10 இதழ்கள் உடைய காசோலை புத்தகம், இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக, 10 இதழ்கள்கொண்ட காசோலைகளுக்கு, 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|