பதிவு செய்த நாள்
27 மே2021
20:43
மும்பை:கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி குறித்த கணிப்பை திருத்த வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான அதன் முந்தைய கணிப்பான, 10.5 சதவீதம் என்ற நிலையை மாற்றவில்லை என்றும்; அதே நிலையை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின், 2020 – 21ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இதற்கு முன் நாட்டின் வளர்ச்சி, 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போதைய சூழலால் அதை திருத்த வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
நிதியாண்டில் வளர்ச்சி, 10.5 சதவீதமாகவும்; முதல் காலாண்டில் மைனஸ் 26.1 சதவீதமாகவும்; இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் முறையே, 8.3, 5.4, 6.2 சதவீதமாகவும் ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையின் மத்தியில் புதிய நிதியாண்டு துவங்கி இருக்கிறது. இருப்பினும் தடுப்பூசிகளின் வரவு உள்ளிட்ட காரணங்களால் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் தனியாக நின்று போராடும் நாடுகளை விட, உலகளவிலான கூட்டு முயற்சியுடன் போராடும் நாடுகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.சரக்கு மற்றும் சேவை வரி வசூல், தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஏப்ரல் மாதத்திலும், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது தயாரிப்பு மற்றும் சேவை உற்பத்தி சிறப்பாக இருப்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
பொருளாதாரம் மீண்டும் மீட்சி பாதையில் பயணிக்கும்போது, அரசாங்கம் தெளிவான திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும்.மேலும் கூடுதல் நிதி இருப்பு ஆதாரத்தை உருவாக்குவதும் முக்கியம். இது எதிர்கால அதிர்ச்சிகளை சமாளிக்க உதவுவதாக இருக்கும்.இவ்வாறு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|