பதிவு செய்த நாள்
03 ஜூன்2021
20:22
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, சரிவை கண்டுள்ளது. கடந்த, எட்டு மாதங்களில் இல்லாத வகையில், முதன் முறையாக இத்துறையானது சரிவை கண்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, வணிக செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகின; புதிய ஆர்டர்கள் குறைந்தது போன்ற காரணங்களால், இம்மாதத்தில் சேவைகள் துறை வளர்ச்சியில் சரிவு காணப்பட்டுள்ளது.‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மே மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ் மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 46.4 புள்ளிகளாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் இது, 54.0 புள்ளிகளாக அதிகரித்திருந்தது.இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும். கொரோனா தொற்றின் தீவிரம் மற்றும் அது தொடர்பான விஷயங்களால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளுக்கான தேவை குறைந்து உள்ளது.
கடந்த நவம்பருக்கு பிறகு, இப்போது தான் வெளிநாட்டு ஆர்டர்கள் சரிவை கண்டுள்ளன. மேலும், ஆர்டர்கள் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், கடந்த மே மாதத்தில், சேவைகள் துறை நிறுவனங்கள், அவற்றின் மனித வளத்தை குறைத்துள்ளன.தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி மற்றும் சேவைகள் துறை வளர்ச்சி இரண்டும் சேர்ந்த பி.எம்.ஐ., குறியீடு ஏப்ரலில், 55.4 புள்ளிகளாக இருந்தது; மே மாதத்தில் 48.1 புள்ளிகளாக சரிந்துள்ளது.
இது, தனியார் துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|