பதிவு செய்த நாள்
24 ஜூன்2021
21:29
புதுடில்லி:‘பங்குச் சந்தை பிதாமகர்’ என போற்றப்படும், வாரன் பபெட், ‘பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின்’ அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது, உலகமெங்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்ஸ், வாரன் பபெட்டின் துாண்டுதலின் காரணமாகவே, அறக்கட்டளை வாயிலாக மிகப் பெரும் அளவில் நன்கொடைகளை வழங்கி வருகிறார்.இந்த அறக்கட்டளையில், பில்கேட்ஸின் மனைவி மெலிண்டாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென வாரன் பபெட் அறக்கட்டளை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.அண்மையில், பில்கேட்சும் அவரது மனைவி மெலிண்டாவும் பரஸ்பரம் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.இருவரும் இல்லற வாழ்க்கையில் பிரிந்தாலும், தொண்டு பணிகள் தொடரும் என்று தெரிவித்திருந்தனர்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, விவாகரத்து முடிவுக்கு வந்திருப்பது தான், பபெட் விலகலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.‘கேட்ஸ்’ அறக்கட்டளையின் நிர்வாக குழுவின் உறுப்பினர்களாக, இம்மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில், அறக்கட்டளை பணிகளில் பில்கேட்சுக்கும், மெலிண்டாவுக்கும் இடையே, நடுவில் இருந்து செயல்படுவது சிரமம் எனக் கருதிய காரணத்தினாலேயே, பபெட் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பபெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த அறக்கட்டளையின் லட்சியமே என்னுடைய லட்சியமும் ஆகும்.‘நான், என்னுடைய பங்காக, எனது, ‘பெர்க்ஷைர் ஹாத்வே’ பங்குகளில், 50 சதவீத பங்குகளை, அறக்கட்டளைக்கு வழங்கி விட்டேன். ஆகையால், அறக்கட்டளை பணிகளிலிருந்து விலகுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தற்போது, 90 வயதாகும் வாரன் பபெட், அவரது சொந்த பணத்திலிருந்து, கிட்டத்தட்ட, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, கடந்த 15 ஆண்டுகளில் அறக்கட்டளை பணிகளுக்காக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|