பதிவு செய்த நாள்
15 ஜூலை2021
19:52
புதுடில்லி:‘மாஸ்டர்கார்டு’ நிறுவனத்துக்கு, ரிசர்வ் வங்கி விதித்த தடை காரணமாக, பல வங்கிகள் மாற்று ஏற்பாடுகளில் இறங்கி வருகின்றன.பரிவர்த்தனை குறித்த தரவுகளை, இந்தியாவில் சேமிப்பது குறித்த விதிமுறையை, மாஸ்டர்கார்டு நிறுவனம் பின்பற்றாத காரணத்தால், 22ம் தேதி முதல், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கி வரும் பல வங்கிகள், மாஸ்டர்கார்டு உடன் இணைந்து சேவைகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மாஸ்டர்கார்டுக்கு ரிசர்வ் வங்கி, ‘ரெட்கார்டு’ காட்டிவிட்டதை அடுத்து, இதே போன்ற மற்றொரு நிறுவனமான, ‘விசா’ நிறுவனத்துடன் இணையும் முயற்சியில் சில வங்கிகள் இறங்கி உள்ளன.
மாஸ்டர்கார்டுக்கு விதிக்கப்பட்ட தடையால், புதிய கார்டுகள் வழங்குவது பாதிக்கப்படும் என, ஆர்.பி.எல்., பேங்க் தெரிவித்துள்ளது. மேலும் தடைவிதிப்பை அடுத்து, இவ்வங்கி, வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்க,‘விசா வொர்ல்டுவைடு’ நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
ஆர்.பி.எல்., பேங்க், இதுநாள்வரை, மாஸ்டர்கார்டு உடன் மட்டுமே இணைந்து, கிரெடிட் கார்டுகளை வழங்கி வந்தது.ஆர்.பி.எல்., பேங்க் மட்டுமின்றி; பஜாஜ் பின்சர்வ், யெஸ் பேங்க் ஆகியவையும் இந்த தடையால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.எச்.டி.எப்.சி., பேங்கின் கார்டு திட்டங்களில், 60 சதவீதம், மாஸ்டர்கார்டு, ஏமெக்ஸ், டைனர்ஸ் ஆகயவற்றுடன் இணைந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் ஆகிய வங்கிகளில் இது, 35 – 36 சதவீதம் இருக்கும், கோட்டக் மகிந்திரா பேங்க், முழுக்க முழுக்க விசா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், அதற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது என, ஜப்பானை சேர்ந்த ‘நொமுரா’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.பல வங்கிகள், மாஸ்டர்கார்டுக்கு பதிலாக, விசா உடன் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கு, 8 முதல் 10 வாரங்கள் வரை பிடிக்கும் என கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடை குறித்து, ‘மாஸ்டர் கார்டு ஆசியா பசிபிக்’ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2018ம் ஆண்டில், உள்நாட்டு பரிவர்த்தனை குறித்த தரவுகளை இந்தியாவில் சேமிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததிலிருந்து, இந்த நிபந்தனைகளுக்கு இணங்குவது குறித்த அறிக்கைகளை, நாங்கள் வழங்கி வந்துள்ளோம்.
இதுகுறித்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு, கூடுதல் விபரங்கள் தேவைப்படும்பட்சத்தில், அவற்றை வழங்கி ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க, வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்ற, நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|