பதிவு செய்த நாள்
16 ஜூலை2021
19:56
மும்பை:‘ரிவோல்ட் மோட்டார்ஸ்’ நிறுவனம் ஆன்லைன் வாயிலாக அதன் மின்சார பைக் விற்பனையை துவக்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே அனைத்து வாகனங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் மக்களின் பார்வை மின்சார வாகனங்களை நோக்கி திரும்பி உள்ளது. ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வியாழனன்று ஆன்லைன் வாயிலாக அதன் மின்சார பைக்குகள் விற்பனையை துவக்கியது. துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து வாகனங்களும் விற்பனையாகி விட்டன. இதற்கு முன் கடந்த ஜூன் 18ம் தேதியன்று இந்நிறுவனம் இதேபோல் விற்பனையை துவக்கியபோது இரண்டு மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: நாட்டின் பல இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியதை அடுத்து மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.மேலும் எங்களுடைய எலக்ட்ரிக் பைக்கில் 100 கி.மீ., செல்வதற்கு ஆகும் செலவு 9 ரூபாய் மட்டுமே. இதுவே சராசரியாக பிற பெட்ரோல் பைக்குகளில் 100 கி.மீ., செல்வதற்கு 250 ரூபாய் ஆகிறது. இதனால் எங்களுடைய ஆர்.வி., 400 மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை கிட்டத்தட்ட 1.07 லட்சம் ரூபாய் ஆகிறது. பேட்டரி விலை சரிவு மற்றும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் ஊக்கச் சலுகைகள் ஆகியவை காரணமாக மின்சார வாகனங்களின் விலையும் குறைந்து வருகிறது.
‘ஓலா’ முன்பதிவு‘
ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம் விரைவில் அறிமுகமாக இருக்கும் அதன் மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த மின்சார ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் தங்களது இணையதளத்தின் வாயிலாக திரும்ப பெறக்கூடிய டெபாசிட் தொகையான 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனத் தயாரிப்புக்கான தொழிற்சாலை தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|