பதிவு செய்த நாள்
18 ஜூலை2021
19:17
வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் அளிப்பது போலவே, நிலம் அல்லது வீட்டு மனை வாங்கவும் கடன் வசதி அளிக்கின்றன.நிலம் வாங்கி வீடு கட்ட நினைப்பவர்கள் அல்லது எதிர்கால தேவைக்காக நிலம் வாங்க விரும்புகிறவர்கள் மனை கடன் பெறலாம். இந்த இரண்டு கடன்களுமே பொதுவான நோக்கம் கொண்டவை என்றாலும், இவற்றுக்கு இடையே முக்கிய வேறுபாடுகளும் இருக்கின்றன. இரண்டு கடன்களுக்கும் இடையே அறிய வேண்டிய மற்ற அம்சங்கள் வருமாறு:
கடன் மதிப்பு:
வீடு அல்லது மனைக்கு கடன் பெறும் போது, அதன் மதிப்பிற்கு ஏற்ப கடன் தொகை வழங்கப் படும். இது, ‘லோன் டு வேல்யூ’ என குறிப்பிடப்படுகிறது. வீட்டுக்கடன் எனில், அதன் சொத்து மதிப்பில் 90 சதவீதம் வரை இருக்கலாம். மனைக்கான கடன் எனில், அதன் மதிப்பில் 70 சதவீதமாக இருக்கும். எஞ்சிய தொகை கடன் பெறுபவரின் பொறுப்பு.
கடன் காலம்:
வீட்டுக் கடன் எனில் தவணை காலம் நீண்டதாக இருக்கும். கடன் பெறுபவர் வயதிற்கு ஏற்ப 25 அல்லது 30 ஆண்டுகள் வரை கூட கடன் காலம் அமையலாம். ஆனால், மனை கடன் எனில் அதிகபட்சம் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. மனையின் அமைவிடமும் முக்கியமாக கருதப்படலாம்.
வரி சலுகை:
சொந்த வீடு தவிர, வீட்டுக் கடன் அளிக்கும் சாதகங்களில் முக்கியமானது வரிச் சலுகை. குடியிருக்கும் வீட்டிற்கான கடன் எனில், அசல் மற்றும் வட்டி மீது வருமான வரிச் சலுகை கோரலாம். மனை கடன் எனில், வரிச் சலுகை பொருந்தாது. மனையில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தாலும், மனை கடனுக்கு வரிச் சலுகை கிடையாது.
வட்டி விகிதம்:
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. சராசரியாக இது 7.5 சதவீதம் முதல் அமைவதாக கருதலாம். மனை கடன் வட்டி இதை விட சற்று கூடுதலாக இருக்கலாம். கட்டப்பட்ட வீட்டை விட, வீட்டு மனை இடர்மிக்கது என வங்கிகள் கருதுகின்றன.
செயல்முறை:
விண்ணப்ப செயல்முறையை பொறுத்தவரை இரண்டு வகை கடன்களுக்குமான வழிமுறை பொதுவானது. தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலித்து, தேவைக்கேற்ப எந்த வகை கடன் என்பதை தீர்மானிக்கலாம்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|