பதிவு செய்த நாள்
18 ஜூலை2021
19:28
பங்கு வர்த்தகத்தில் இடர் இருப்பது போலவே, பொது பங்கு வெளியீட்டிலும் இடர் உள்ளதை முதலீட்டாளர்கள் அறிய வேண்டும்.
இந்திய சந்தையில், பொது பங்கு வெளீயிடு தொடர்பான பரபரப்பும், ஆர்வமும் தொடர்கிறது. ஏற்கனவே இந்த ஆண்டு, பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டியுள்ள நிலையில், மேலும் பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன. இவற்றில் பெரிய நிறுவனங்களும் இருப்பதாலும், கடந்த ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்த நிறுவனங்களின் பங்குகள் பல நல்ல பலனை தந்திருப்பதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் பங்கு வெளியீடு தொடர்பான ஆர்வம் அதிகம் இருக்கிறது. எனினும், பங்கு வர்த்தகம் போலவே, பொது பங்குகளை வாங்குவதிலும் இடர் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
என்ன நோக்கம்?
பொதுவாகவே சில்லரை முதலீட்டாளர்கள் பங்கு வெளியீட்டை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எனவே, பங்கு வெளியீடு தொடர்பான முக்கிய அம்சங்களை பரிசீலிப்பதும் அவசியமாகிறது. பங்கு வெளியீட்டில், முதலில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், நிறுவனம் திரட்டப்படும் நிதி எதற்காக பயன்படுத்தப்படும் என்பதாகும்.
இந்த நிதி நிறுவன கடனை அடைக்க பிரதானமாக பயன்படுத்தப்படும் எனில், அதனால் முதலீட்டாளர்களுக்கு லாபம் இல்லை. கடன் தவிர, வர்த்தக வளர்ச்சிக்கு நிதி பயன்படுத்தப்படும் என்றால், இதனால் முதலீட்டாளர்கள் பயன் பெறும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் நிறுவனம் ஈடுபட்டுள்ள வர்த்தகத்தையும் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிறுவன வளர்ச்சி திட்டங்களை சீர் துாக்கி பார்க்கவும் இந்த புரிதல் உதவும்.நிறுவன வர்த்தகத்தில் கவனம் செலுத்துவது போலவே, அதன் பின்னே உள்ள நிறுவனர்கள் மற்றும் நிர்வாக குழு பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நிறுவன செயல்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சியில் இவர்களின் பங்கே பிரதானம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த அம்சங்களை அறிவது, சந்தையில் நிறுவனத்திற்கு உள்ள வளர்ச்சி வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ள உதவும். எதிர்காலத்தில் செழிக்கும் வர்த்தக மாதிரியை நிறுவனம் கொண்டிருப்பது அவசியம்.
போட்டி தன்மை
இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலிக்கும் முன், பங்கு வெளியிட்டிற்கு முன் நிறுவனம் கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் சமர்ப்பித்த ‘ரெட் ஹியிரிங்’ அறிக்கையில் உள்ள விபரங்களை கவனமாக படிக்க வேண்டும். இதன் மூலம் நிறுவனத்தின் பலம் மற்றும் பலவீனம் தொடர்பான அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். நிறுவனம் செயல்படும் துறையில் அதன் நிலையையும் அறியலாம். அதே போல நிறுவனத்தின் நிதி நிலை விபரங்கள் மற்றும் சந்தை மதிப்பீடும் முக்கியம்.
நிறுவனம் சார்ந்துள்ள துறையில், அதே போன்ற நிறுவனங்கள் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, நிறுவன மதிப்பை அவற்றுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நிறுவனத்தின் போட்டித் தன்மை குறித்தும், சந்தையில் அதற்குள்ள முக்கிய இடர் அம்சங்களும் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.மேலும், பொது பங்குகளை வாங்குவதாக இருந்தால், முதலீட்டிற்கான கால அளவையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உடனடி லாபம் பார்க்கும் நோக்கமா அல்லது நீண்ட காலம் பங்குகளை வைத்திருக்கும் திட்டமா என்பது தொடர்பாகவும் முதலீட்டாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|