பதிவு செய்த நாள்
15 ஆக2021
19:03
நிதி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், எதிர்கால இலக்குகளை திட்டமிடவும் கடன் வசதி உதவுகிறது. தேவைக்கு ஏற்ப பல வகையான கடன் பெறலாம் என்றாலும், ஒவ்வொரு வகையான கடனுக்கும் ஒரு செயல்முறை இருக்கிறது.
கடன் விண்ணப்பத்தை முறையாக சமர்ப்பித்து வெற்றிகரமாக கடன் பெறுவது ஒரு பகுதி என்றால் அதைவிட முக்கியமானது கடனை சரியாக பராமரிப்பதாகும். கடன் சுமையில் சிக்காமல் இருக்க இது உதவும். அந்த வகையில் கடன் அனுமதி கிடைத்த பின் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
மாதத் தவணை:
வீட்டுக்கடனாக இருந்தாலும் சரி, கிரெடிட் கார்டு கடனாக இருந்தாலும் சரி, மாதத் தவணையை தவறாமல் செலுத்துவது முக்கியம். கடன் தவணை தவறுவது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் என்பதோடு, கடன் வலையில் சிக்குவதற்கான துவக்கமாகவும் அமையலாம். எனவே, முறையாக மாதத் தவணையை செலுத்துவதற்கான ஏற்பாடு அவசியம்.
அவசரகால நிதி:
பெரும்பாலானோர் அவசர கால நிதியின் அவசியத்தை உணர்ந்திருக்கலாம். எதிர்பாராத நெருக்கடிகளில், அத்தியாவசிய செலவுகளை சிக்கல் இல்லாமல் மேற்கொள்ள இந்த நிதி உதவுகிறது. பொதுவாக ஆறுமாத கால அடிப்படை செலவுக்கான தொகை அவசர கால நிதியாக இருக்க வேண்டும். இந்த தொகையில் கடன் தவணையும் சேர்ந்திருப்பது நல்லது.
கடன் அம்சங்கள்:
கடன் பெற்ற பின், மாதத்தவணை சுமையை குறைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். கடன் நிலுவைத்தொகையை மாற்றிக்கொள்ளும் வசதி இருந்தால், குறைந்த வட்டி அளிக்கும் வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஒப்பீடு இணையதளங்களை பார்த்து இது தொடர்பான தகவல்களை அறியலாம்.
உபரி நிதி:
மாதத்தவணையை முறையாக செலுத்தி வந்தால் மட்டும் போதாது. இயன்றவரை கடனை முன்கூட்டியே செலுத்த முயற்சி செய்வது நல்லது. வாய்ப்பு இருந்தால், ஒரு பகுதி தொகையை முன்னதாக செலுத்தலாம். உபரியாக நிதி கிடைக்கும் போது வேறு செலவுகளை திட்டமிடாமல், கடனுக்கான முன்பணமாக செலுத்தலாம்.
கிரெடிட் ஸ்கோர்:
கடன் தொகையை செலுத்துவது தவிர, கடன் கணக்கை அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும். கணக்கு தொடர்பாக ஏற்படக்கூடிய எதிர்பாரா தவறுகளை இதன் மூலம் சரி செய்ய முடியும். மேலும் கிரெடிட் ஸ்கோர் அறிக்கையையும் கவனித்து ஏதேனும் தவறு இருந்தால் சரி செய்ய வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|