பதிவு செய்த நாள்
15 ஆக2021
21:34
என் தந்தை மறைந்துவிட்டார். அவர் சில பல கம்பெனிகளின் பங்குகளை வைத்திருந்தார். இறப்பு உள்ளிட்ட உரிய சான்றிதழ்களை பெற்றுவிட்டோம். பங்குகளை பெற, ‘சக்சஷன்’ சான்றிதழ் வேண்டும் என்று அறிந்தோம். அதை எங்கு, எவ்வாறு பெறுவது?
ஆர். ஆர். மோதிலால், மதுரை.
உங்கள் தந்தை எந்தப் பகுதியில் கடைசியாக வாழ்ந்து மறைந்தாரோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதியிடம் தான், ‘சக்சஷன்’ சான்றிதழுக்கு மனு செய்யவேண்டும். இதற்கு, அவரது மொத்த சொத்து மதிப்பில் மூன்று சதவீதத்தை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, எந்த மறுப்பும் வராத பட்சத்தில், நீதிமன்றமே சான்றிதழை வழங்கும்.
கடந்த 2016ல், தேசிய வங்கி ஒன்றில் வீட்டுக்கடன், 20 ஆண்டுகால வரம்பில், 11 லட்சம் ரூபாய் வாங்கினேன். தற்சமயம் கொரோனா காரணத்தால், வேலை இழப்பு ஏற்பட்டு விட்டது. இதுவரை கடன் தவணைத் தொகை தவறாமல் கட்டி உள்ளோம். தற்போது 9.6 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. இப்போது வீட்டுகடனை நாங்கள் முடித்தால், எவ்வளவு பணம் கட்ட வேண்டிஇருக்கும்? அப்படி முடிக்க முடியுமா?
செல்வம், மின்னஞ்சல்.
நீங்கள் என்று கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தப் போகிறீர்களோ, அன்று 9.6 லட்சம் ரூபாயைவிட ஒருசில ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கலாம். அதைச் செலுத்தலாம். இந்தக் கொரோனா காலத்தில், வாய்ப்பிருந்தால், முழுப் பணத்தையும் திருப்பிச் செலுத்தி முடித்துக்கொள்வது மிகவும் நல்லது. மாதாந்திர தொந்தரவு தொலையும்.
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், ‘சிபில் ஸ்கோர்’ குறையும் என்கிறார்களே, இது உண்மையா?
ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.
இதில் இரண்டு விதங்கள் உள்ளன. நீங்கள் கடன் வாங்கப் போகும்போது, குறிப்பிட்ட வங்கியோ, நிதி நிறுவனமோ, உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆய்வுசெய்வது, ‘ஹார்டு என்கொய்ரி’ என்றும், நீங்களே அவ்வப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பார்ப்பது, ‘சாப்ட் என்கொய்ரி’ என்றும் அழைக்கப்படுகின்றன. ஹார்டு என்கொய்ரி அதிகமாகும்போது, உங்கள் கடன்சுமை அதிகமாகியுள்ளதாக அர்த்தம் என்று கடன் வழங்குபவர்கள் நினைக்கிறார்கள். நீங்களே உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பார்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை.
‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி’ பங்கை 5,000 ரூபாய்க்கு என் கணவர் 1996ல் வாங்கினார். அந்த பங்கு சர்டிபிகேட்டை ஏதோ ஒரு முகவரிடம் கொடுத்ததாக சொல்கிறார். பின் அதை நாங்கள் மறந்து போனோம். அதன் நம்பரும் எங்களுக்கு தெரியாது. இதில் ஏதாவது செய்ய முடியுமா?
நந்தினி கண்ணன், மின்னஞ்சல்.
உங்களிடம் இருக்கும் விபரங்களான, பங்கை வாங்கியவரது பெயர், முகவரி, முகவரது பெயர், காசோலை விபரம் போன்றவற்றைக் குறிப்பிட்டு, டி.எம்.பி., வங்கிக்கு எழுதுங்கள். அவர்களிடம் விரிவான வாடிக்கையாளர் குறைதீர் அமைப்பு இருப்பதாக அறிகிறேன். உங்கள் கணவரது பங்கு சான்றிதழ் எண்ணை தேடிக் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது.
சமீபத்தில் மறைந்த என் மகனது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். பான் எண் உள்ளது. ஆனால், அதற்கான கடவுச் சொல் தெரியவில்லை. எப்படி கணக்கைச் சமர்ப்பிப்பது?
டி. ஸ்ரீதரன், பள்ளிகரணை.
உங்கள் மகனது சார்பில் நீங்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்ய, முதலில் அவரது பான் எண்ணைக் கொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின், விபரங்களை வழங்க வேண்டும். உங்களுக்கு நேரமும் பொறுமையும் இருந்தால், புதிய வருமான வரி வலைத்தளத்தில் இதையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து, நீங்களே செய்யலாம். அல்லது நல்லது ஆடிட்டர் ஒருவரது உதவியை நாடுங்கள்.
மியூச்சுவல் பண்டு திட்டம் ஒன்றில், 1988ல் முதலீடு செய்தேன். தற்போது அந்த முதலீட்டைத் திரும்பப் பெற விபரங்கள் கொடுத்தபோது, என் கணக்கில் ஒரு யூனிட்டும் இல்லை என்று பதில் வருகிறது. எங்கே முறையிடுவது?
எஸ். நாகராஜன், மின்னஞ்சல்.
நீங்கள் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்டின் வலைத்தளத்துக்குச் சென்றீர்கள் என்றால், குறைதீர்வுக்கான வழிமுறைகளையும், அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகளையும் கொடுத்துள்ளனர். அவர்களைக் கேளுங்கள். அப்படியும் உங்கள் குறை தீரவில்லை என்றால், ‘செபி’யின் குறைதீர் வலைத்தளமான https://scores.gov.in/scores/Welcome.html தளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யுங்கள்.
கடந்த 2014ல், 18.21 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினேன். ஆகஸ்ட் 2021 வரை 92 மாதத் தவணைகளை ஒழுங்காகச் செலுத்தி உள்ளேன். இதுவரை நான் 16.33 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளேன். ஆனால், தற்போது கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று விசாரித்தபோது, மேலும் 16.99 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்கின்றனரே? இது என்ன கணக்கு?
மணி ஆறுமுகம், கோவை.
ஆச்சரியப்படாதீர்கள். 25 அல்லது 30 ஆண்டுக்கால வீட்டுக் கடன் என்றால், முதல் பத்து ஆண்டுகள் வரை, வட்டி பகுதி அதிகமாகவும், அசல் பகுதி குறைவாகவும் இருக்கும். மேலும், வட்டி விகிதம் மாறுதலுக்குட்பட்டது என்பதால், அதனாலும், வாங்கிய கடனின் மதிப்பு மாறுபடும். உங்களது உழைப்பையும் மகிழ்ச்சியையும் சிறுகச் சிறுக உறிஞ்சுவதில், வீட்டுக் கடனுக்கு இணையே இல்லை!
நான் ஒரு சீனியர் சிட்டிசன். என் சேமிப்புகளை எல்லாம், ‘தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய எண்ணுகிறேன். இதில் மற்ற வங்கிகளை விட வட்டி விகிதம் அதிகம் தருவதாக கூறப்படுகிறது.
சுகுமார், சென்னை.
தமிழக அரசுத் துறை நிறுவனம் என்பதால், அரசாங்க ரீதியான பாதுகாப்பு இதற்கு உண்டு. இது வங்கியல்லாத நிதி நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டு இருப்பதால், இதன் முதலீடுகளுக்கு டெபாசிட் காப்பீடு இல்லை.பொதுவாக, சேமிப்புகளை எல்லாம் ஒரே இடத்தில் முதலீடு செய்வது ஆரோக்கியமானது அல்ல. வங்கிச் சேமிப்பு, மியூச்சுவல் பண்டு, அஞ்சலகம் போன்ற இதர இனங்களிலும் பணத்தை போட்டு, உங்கள் முதலீட்டு ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்வதே பாதுகாப்பானது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ -– மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014
என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|