பதிவு செய்த நாள்
19 ஆக2021
19:37
புதுடில்லி:ஒருபக்கம், பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., ஆகியவை படுக்கையில் கிடக்கின்றன. இன்னொரு பக்கம், தனியார் துறை நிறுவனமான, ‘வோடபோன் ஐடியா’ இதே நிலைமைக்கு சென்று கொண்டுஇருக்கிறது.
இந்நிலையில், இம்மூன்று நிறுவனங்களையும் ஏன் ஒருங்கிணைக்க கூடாது என, சந்தையில்சில நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
வாய்ப்பு
தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து ஓய்ந்து விட்டது, வோடபோன் ஐடியா. இதேபோல் தான் பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் கதையும்.இந்நிலையில், இம்மூன்றையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு வாய்ப்பை பெறலாம் என்கிறார்கள்.
தொழில்நுட்ப விஷயத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், ‘4ஜி ஸ்பெக்ட்ரம்’ சேவையில் சிக்கல்களுடன் உள்ளன. அதேசமயம், ‘2ஜி’ மற்றும், ‘3ஜி’ சேவையில் சிறப்பாக இருக்கின்றன. வோடபோன் ஐடியாவிடம், ‘4ஜி’ வசதி சிறப்பாக இருக்கிறது. இணைப்பின் வாயிலாக பி.எஸ்.என்.எல்., தன்னுடைய 3ஜி சேவையை, 4ஜி சேவையாக உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., கிராமப்பகுதிகளில் வலுவாக இருக்கின்றன. வோடபோன் ஐடியா நகரம் மற்றும் பெருநகரங்களில் வலுவானதாக இருக்கிறது.லேண்ட்லைன் இணைப்புகளில், வோடபோன் ஐடியா சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள், இச்சேவையில் மற்றவற்றை விட வலுவாக இருக்கின்றன. மேலும் இந்த இரு பொதுத்துறை நிறுவனங்கள் வசம், நாடு முழுக்க, 8 லட்சம் கிலோமீட்டர் ‘பைபர் நெட்வொர்க்’ இருக்கிறது. இதனால் 5ஜி சேவையை வழங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வோடபோனுக்கு கிடைக்கும்.
இது போன்ற சாதகமான பல அம்சங்கள் இவை இணையும்பட்சத்தில் இருதரப்புக்கும் கிடைக்கும்.இருப்பினும் சில சிக்கல்களும் இருக்கின்றன. சம்பள விகிதங்கள், தொழிலாளர்கள் எண்ணிக்கை போன்றவற்றில் பலத்த வித்தியாசங்கள் இருக்கின்றன.
சிக்கல்கள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வோடபோன் ஐடியா ஏலத்தில் பெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் அரசு நிர்வாக ஒதுக்கீட்டின் வாயிலாக பெற்றுள்ளன. இணைப்புக்கு பிறகு இதை எப்படி கையாள்வது என்பதில் சில சட்ட சிக்கல்கள் எழலாம்.இருப்பினும், தடுமாறும் இம்மூன்று நிறுவனங்களையும் நிலை நிறுத்திக் கொள்ள, இந்த ஒருங்கிணைப்பு ஒரு நல்ல வாய்ப்பு. இந்த முயற்சியையும் எடுக்காவிட்டால், இம்மூன்று நிறுவனங்களையும் காப்பாற்றுவது கஷ்டம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சவால்
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, வேலை பாதுகாப்பு, ஓய்வூதியம் என பல வசதிகள் இருக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனத்தில் இந்த வசதிகள் இல்லை. இதனால் இணைப்பில் இது பெரிய சவாலாக இருக்கக்கூடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|