பதிவு செய்த நாள்
22 ஆக2021
19:16
கொரோனா பெருந்தொற்று பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் எனில், ஒரு சிலர் ஊதிய குறைப்பு அல்லது வருவாய் குறைப்பை எதிர்கொண்டுள்ளனர். இன்னும் சிலர், அவசர தேவையை சமாளிப்பதற்கான ஓய்வு கால சேமிப்பில் கைவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். ஓய்வு கால சேமிப்பை குறைத்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கலாம். ஓய்வு கால திட்டமிடல் என்பது எதிர்கால நலனுக்கு முக்கியமானது என்பதால், கொரோனா பாதிப்பால் தடம் புரண்டிருந்தால், ஓய்வு கால திட்டமிடலை சீராக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.
ஆய்வு தேவை:
பொதுவாகவே ஓய்வு கால திட்டமிடல் சீராக இருக்கிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்வது அவசியம். இலக்குகளுக்கு ஏற்ற முதலீடுகளை மேற்கொள்ள இது உதவும். தற்போதைய சூழலில், ஓய்வு கால திட்டமிடலை ஆய்வு செய்வதன் மூலம், அதில் ஏதேனும் இடைவெளி இருக்கிறதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.
என்ன பாதிப்பு?
வேலையிழப்பு ஏற்பட்டிருந்தால், ஆறு மாத அடிப்படை செலவுகளுக்கான தொகை கைவசம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தொடர் முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தலாம். ஆனால், காப்பீடு பிரிமியம்களை தொடர்வது அவசியம். பி.எப்., தொகையை எடுக்கும் வாய்ப்பை கடைசியாக பரிசீலிக்க வேண்டும்.
செலவு குறைப்பு:
ஊதிய குறைப்பை எதிர்கொள்ளும் நிலை இருந்தால், செலவுகளை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கடன் தவணை மற்றும் காப்பீடு பிரிமியம்களை தொடர வேண்டும். நிதி இலக்குகளையும் மறுபரிசீலனை செய்து, அதற்கேற்ப முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அச்சம் தவிர்:
ஒரு சிலர் அவசர தேவைக்காக, ஓய்வு கால சேமிப்பில் இருந்து பகுதி தொகையை விலக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கலாம். இது ஓய்வு காலத்தை பாதிக்கும் என்றாலும், பதற்றம் அடையாமல் செயல்பட வேண்டும். இதை ஈடு செய்வதற்கான வழிகளை ஆராய வேண்டும்.
இலக்கு முக்கியம்:
தற்போதைய சூழலில், ஓய்வு கால சேமிப்பு என்பது கடினமாக தோன்றலாம். எனினும் இதன் முக்கியத்துவத்தை மறந்து விடக்கூடாது. ஓய்வு கால சேமிப்பை அலட்சியம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். தற்காலிக இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், நிலைமை சீரான பின் சேமிப்பை தொடர்வதே ஏற்றது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|