பதிவு செய்த நாள்
22 ஆக2021
21:16

தனியார் நிறுவனம் ஒன்று, ‘குமுலேட்டிவ் டெபாசிட்’ எனும், கூட்டு வட்டி வைப்புத் தொகைக்கு, 5 ஆண்டுக்கு 9.05 சதவீத வட்டி தருகிறோம் என்கிறது. நம்பலாமா?
ஆர்.ரங்கநாதன், மின்னஞ்சல்.
மீண்டும் மீண்டும் நான் ஒரே விஷயத்தைத் தான் சொல்லி வருகிறேன். வட்டிக்கு ஆசைப்பட்டு, முதலுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளாதீர். இது கொரோனா காலம். வட்டி விகிதம் குறைவாகத் தான் இருக்கும். நாட்டின் பொருளாதாரம் மீளும் வரைக்கும், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த நிலை தான் நீடிக்கும். அசலை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
பங்கு சந்தை ஐ.பி.ஓ.,வில் விண்ணப்பித்தால், 'ஓவர் சப்ஸ்க்ரைப்ட்' கம்பெனிகளின் பங்குகள் ஒருமுறை கூட எனக்கு ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கீடு எவ்வாறு செய்கிறார்கள்? இதில் ஏதாவது ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்களா?
ஜெ. நெடுமாறன், ராமாபுரம்.
பங்குகள் பட்டியலிடப்படும் நாளில், ‘லிஸ்டிங் கெயினில்’ நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஐ.பி.ஓ., குறித்த கருத்து, இப்போது சந்தையில் தலைக்கேறியுள்ளது. அதனால் தான், பலருக்கும் புதிய நிறுவன பங்குகள் கிடைப்பதில்லை. பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முன், ‘ஸ்மால் கேப்’ மற்றும், ‘மிட் கேப்’ பங்குகள் விலை விண்ணை முட்டும்; ஐ.பி.ஓ.,க்கள் ‘ஓவர் சப்ஸ்க்ரைப்’ ஆகும். 2001 – 2008 ஆண்டுகளில் இதைப் பார்த்திருக்கிறோம். மீண்டும் பார்க்கப் போகிறோமோ என்னவோ! பங்குச் சந்தையில் இருந்து கொஞ்சம் விலகி இருங்கள்.
தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
ரவி சேஷாத்ரி, நரிக்குடி.
செய்யலாம். கடந்த ஓராண்டில், தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 16 சதவீதம் சரிந்துள்ளது. ஆகஸ்ட் 7, 2020ல், பத்து கிராம் தங்கத்தின் விலை 55,922 ரூபாயைத் தொட்டது. கடந்த வெள்ளியன்றோ, அதுவே 48,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம், கடந்த மூன்றாண்டுகளில் 16.3 சதவீத வருவாயையும்; 5 ஆண்டுகளில் 8.5 சதவீத வருவாயையும்; 7 ஆண்டுகளில் 7.2 சதவீத வருவாயையும்; பத்தாண்டுகளில் 6 சதவீத வருவாயையும் ஈட்டித் தந்துள்ளது. குறைந்தபட்சம் 3 ஆண்டு காலம் காத்திருக்கும் பொறுமைஉடையோர், தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
என் சேமிப்பை பல்வேறு அரசு முதலீட்டு இனங்களில் போட்டு வைத்துள்ளேன். அனைத்திற்கும் என் சகோதரிகளே நாமினி. என் காலத்திற்குப் பின், இவர்கள் சிரமமில்லாமல் என் சேமிப்பைப் பெற இது போதுமானதா?
சீனிவாசன், கொட்டிவாக்கம்.
நாமினியாக ஒருவரை குறிப்பிடும்போது, அவரை வெறும் சகோதரி, மனைவி என்று மட்டும் போடக்கூடாது. அவரது பெயர், வயது, முகவரி, உங்களுக்குள்ள உறவு ஆகியவற்றை மிகத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். உங்களது ஒவ்வொரு முதலீட்டு ஆவணத்திலும் இதைச் சிரமம் பார்க்காமல் செய்யவும். இதையெல்லாம் நீங்கள் செய்திருந்தீர்கள் என்றால், உங்கள் சகோதரிகளுக்கே உங்கள் சேமிப்புகள் போய்ச் சேரும்.
என் வைப்பு நிதி சான்றிதழைத் தொலைத்துவிட்டேன். அதன் வரிசை எண்ணை குறித்து வைத்துள்ளேன். நகல் சான்றிதழ் பெற முடியுமா?
உமா மகேஸ்வரி, திருவள்ளூர்.
முடியும். வங்கிக் கிளைக்குச் சென்று, உங்களது வைப்பு நிதியின் வரிசை எண், முதிர்வு தேதி, உங்கள் முகவரி, ஆதார் எண் போன்றவற்றை குறிப்பிட்டு, விண்ணப்பம் ஒன்றை எழுதி, உரியவரிடம் கொடுங்கள். கூடவே, வங்கிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிடும் ‘இன்டெம்னிட்டி’ எனும் முன் காப்பீடு கடிதம் எழுதி, நூறு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டித் தரச் சொல்வார்கள். விபரங்களைச் சரிபார்த்த பின்னர், நகல் சான்றிதழ் வழங்குவர்.
பங்குச் சந்தை பாய்ச்சலால், நான் வைத்துள்ள பங்குகளின் விலை நன்கு உயர்ந்துள்ளது. அவற்றை விற்றுவிடலாமா? சந்தை உயரும் என்று இன்னும் காத்திருக்கலாமா?
சீனிவாசன், சென்னை.
இரண்டு உத்திகளை வைத்துக்கொள்ளுங்கள். ஒன்று, நீங்கள் போட்ட அசல் தொகை வரைக்கும் உள்ள பங்குகளை விற்று, வேறு வளரும் வாய்ப்புள்ள பங்குகளில் முதலீடு செய்வது ஒரு உத்தி. குறைந்தபட்சம் 20 சதவீத வருவாய் ஈட்டிவிட்டால், போதும் என்று முடிவு செய்து, ஒரு குறிப்பிட்ட பங்கை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறிவிடுவது இரண்டாவது உத்தி. உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு, அதற்கேற்ப செயல்படுங்கள்.
என் பிள்ளைகள் பணிபுரிகின்றனர். அவர்களின் வருமானத்தில், 55+10+35 என முறையே, எதிர்கால சேமிப்பு, அவசர நிதி, தற்கால செலவினங்கள் என, வரைமுறைப்படுத்தி வழி நடத்துகிறேன். இதுபற்றி தங்களின் கருத்து?
சா. முத்து. கோவை.
தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது போன்ற இயல்பான செயல் தான் சேமிப்பு என்பது. இதன் முக்கியத்துவத்தை மட்டும் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் போதுமானது. ‘வரைமுறைப்படுத்தி வழிநடத்துவது’ கொஞ்சம் அதீதமானது. அவர்கள் என்ன கைக்குழந்தைகளா? எதிர்கால நலனைப் பற்றி அவர்களே யோசித்து முடிவெடுக்க அனுமதியுங்கள்.
வீடு வாங்க திட்டம். மொத்த செலவில் 60 சதவீதம் தான் வீட்டுக்கடன் மூலம் கிடைக்கிறது. மீதமுள்ள தொகைக்கு, என் சேமிப்புகளை முதலீடு செய்வது மட்டுமல்லாது, பழைய வீட்டை அடமானம் வைத்து கடன் பெற யோசனை. அல்லது நகைகளை அடகு வைக்கலாமா? என் திட்டம் சரியா?
காவக்கேணி வெங்கட், திருவல்லிக்கேணி.
இரண்டு கடன்கள், இரட்டைத் தலைவலி. புது வீட்டில் உங்களுக்கு நிம்மதியே இருக்காது. பழைய வீட்டை விற்றுவிட்டு, மீதமுள்ள தொகையைத் திரட்டுங்கள். ஒரே ஒரு கடன் வைத்துக்கொள்ளுங்கள். சேமிப்புகளும், நகைகளும் எதிர்காலத் தேவைக்கானது. வீடு வாங்குவதிலேயே மொத்த எதிர்காலமும் முடிந்துவிடுவதில்லை என்பது ஞாபகமிருக்கட்டும்.
அரசு உடையமையாக்கப்பட்ட வங்கிகளில், ‘ஐ.எப்.எஸ்.சி. கோடு’ உள்ளது. அஞ்சலகங்களில், ‘சி.ஐ.எப். கோடு’ உள்ளது. ஆனால், அஞ்சலக வங்கிக்கு, ‘நெப்ட்’ செய்யப்படுவதில்லை, அதனால் வட்டியை அஞ்சலக வங்கிக்கு அனுப்ப முடியாது என்கின்றனர் தனியார் நிதி நிறுவனத்தினர். இது எதனால்?
கே.கே. லோகையா, குறுஞ்செய்தி.
இல்லையே! அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கிகளில், நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ்., ஐ.எம்.பி.எஸ்., யு.பி.ஐ., வசதிகள் உள்ளனவே? பணத்தை அனுப்பவோ, பெறவோ முடியும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ -– மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014
என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ், pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|