பதிவு செய்த நாள்
12 செப்2021
19:19
அனைவராலும் நாடப்படும் முதலீடு வாய்ப்பாக வைப்பு நிதி அமைகிறது. அதிகம் பாதுகாப்பானது மற்றும் அனைத்து விதமான நிதி இலக்குகளுக்கும் ஏற்றது உள்ளிட்ட அம்சங்கள், வைப்பு நிதியின் சிறப்பம்சமாக அமைகின்றன. பங்கு முதலீடு போன்றவற்றுடன் ஒப்பிடும் போது வைப்பு நிதியின் பலன் குறைவாக இருக்கலாம் என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட பலன் இதன் முக்கிய அம்சமாக அமைகிறது. வைப்பு நிதியில் முதலீடு செய்யும் போது, பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். இவற்றில் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கால அளவு:
வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். அதே போல வைப்பு நிதியின் கால அளவும் வட்டி விகிதத்தை தீர்மானிக்கும். ஓராண்டு வைப்பு நிதியை விட, 10 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி அதிகம் இருக்கும். எனவே, நிதி இலக்குகளுக்கு ஏற்ற கால அளவை தேர்வு செய்ய வேண்டும்.
மதிப்பீடு:
நிதி நிறுவனங்கள் வழங்கும் வைப்பு நிதிகளுக்கு,‘கிரிசில்’ மற்றும் ‘கேர்’ உள்ளிட்ட ‘ரேட்டிங்’ நிறுவனங்கள் மதிப்பீடு வழங்குகின்றன. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இவை தீர்மானிக்கப்படுகின்றன. அதிக ரேட்டிங் எனும் அந்த அளவு பாதுகாப்பானது என கருதலாம். எனவே, வைப்பு நிதி மதிப்பீட்டை பார்க்க வேண்டும்.
வட்டி விகிதம்:
தற்போது வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் சராசரியாக 6.70 சதவீதம் எனும் அளவில் இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு சற்று கூடுதல் வட்டி கிடைக்கலாம். வட்டியை மாதாந்திரம் அல்லது காலாண்டு அடிப்படையில் பெறலாம்; முதிர்வு காலத்தில் அசலுடன் சேர்ந்து மொத்தமாக வட்டியை பெறலாம்.
கடன் வசதி:
வைப்பு நிதி கணக்கு கடன் வசதியும் கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். அவசர தேவை எனில் வைப்பு நிதி மீது கடன் பெறலாம். பொதுவாக முதலீட்டில் 75 சதவீதம் வரை கடனாக பெறலாம். தவணையாக செலுத்தி கடனை அடைக்கலாம். வைப்பு நிதி காலம் கடனுக்கான காலமாக அமையும்.
நிறுவனம்:
பொதுவாக வங்கி வைப்பு நிதி பாதுகாப்பானது. எனினும் வங்கியின் செயல்பாடுகளையும் மனதில் கொள்ள வேண்டும். நிதி நிறுவனங்கள் எனில் ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும். வட்டி விகித பலனை மட்டும் பார்க்கக் கூடாது; நிதி இலக்கையும் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|