பதிவு செய்த நாள்
19 செப்2021
19:07
ஆர்.இ.ஐ.டி., என்பதில் முதலீடு செய்யலாம் என்கின்றனரே, அது என்ன?
ஹேமவர்ஷிணி, விருகம்பாக்கம்.
‘ரியல் எஸ்டேட் இன்வெஸ்மென்ட் டிரஸ்ட்’ என்பதின் சுருக்கமே, ஆர்.இ.ஐ.டி., என்பது. இதுவும் ‘மியூச்சுவல் பண்டு’ போன்றதே. பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ நேரடியாக முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாதோருக்கு, வழி செய்து கொடுப்பதே மியூச்சுவல் பண்டுகள். அதேபோன்று, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் வளர்ச்சியின் பயனை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக இந்த, ‘டிரஸ்ட்’ அனுமதிக்கப்பட்டுள்ளது.ரியஸ் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்து, அதில் இருந்து கிடைக்கும் வாடகை, மூலதன ஆதாயம் போன்ற லாபங்களைப் பங்கிட்டு கொடுப்பதற்காக இந்த டிரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று உட்கட்டுமானத் துறை, எரிசக்தி துறைகளில் முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பங்கிட்டு தருவதற்கும் இதுபோன்ற டிரஸ்டுகள் உள்ளன. பங்குகளைப் போன்று இவையும் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. பங்குகள், கடன் பத்திரங்களைப் போன்று மற்றொரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக தற்போது உருவாகி வருகின்றன.
அரசு ஊழியர்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?
காயத்ரி நரேஷ், மயிலாப்பூர்.
செய்யலாம். மத்திய அரசு பணியாளர்கள், பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டு திட்டங்கள் போன்ற எந்த ஒன்றிலும் முதலீடு செய்யலாம். ஓராண்டில் அவர்களுடைய மொத்த முதலீடு, அவர்களுடைய ஆறு மாத அடிப்படை சம்பளத் தொகைக்கு மேல் போகுமானால், அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கென்று ஒரு படிவத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதலீடு செய்யலாமே தவிர, ‘ஸ்பெகுலேட்’ அதாவது, ஊக வணிகம் செய்யக் கூடாது. 2019ல், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள இந்த வரையறைகளை, மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன
.நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினேன். அங்கு பி.எப்., பிடித்தம் செய்தனர். பின்னர் இரண்டு நிறுவனங்கள் மாறினேன். முதலாவதாக பணியாற்றிய நிறுவனத்தில் எனக்கு, ‘டேட் ஆப் எக்ஸிட்’ செய்து கொடுக்க மறுக்கின்றனர். இது குறித்து புகார் அளிக்க முடியுமா?
கார்த்திக் ராஜா, பழநி.
‘டேட் ஆப் எக்ஸிட்’ஐ நீங்கள் பி.எப்., வலைதளத்துக்கு போய் ‘அப்டேட்’ செய்துகொள்ள முடியும். உங்கள், ‘யுனிவர்சல் அக்கவுன்ட்’ எண்ணைப் பதிவிட்டு உள்ளே சென்று, ‘மேனேஜ்’ என்ற பகுதியில் உங்கள் தகவலைப் பதிய முடியும்.
என் 26 வயது மகனுக்கு 45 ஆயிரம் ரூபாய் நிகர சம்பளம். 15 ஆயிரம் ரூபாய் சொந்த தேவைகளுக்கு போக, 30 ஆயிரம் ரூபாயை சேமிக்கச் சொல்லியுள்ளேன். எந்தெந்த இனங்களில், எவ்வளவு முதலீடு செய்யலாம்?
சரஸ்வதி, நங்கநல்லுார்.
எதெல்லாம் முக்கியம், எதெல்லாம் வாழ்க்கையில் நிச்சயம் நடைபெறும் என்பதை சொல்கிறேன். அவற்றை எதிர்கொள்ள எவ்வளவு சதவீதம் முதலீடு செய்யலாம் என்பது, உங்கள் மகன் அவர் வாழ்க்கை குறித்து என்ன நினைக்கிறார் என்பதைப் பொறுத்தது. ஓய்வு காலம், உடல் ஆரோக்கியம், திருமணம், குழந்தைகள் கல்வி ஆகிய நான்கும் நிச்சயம். எப்போதும் ‘எதிர்பாரா செலவு’ என்ற ஒரு இனத்தை தனியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஐந்திலும் பாதிப்பு வரலாம். அதனால், எதிர்பாராததை எதிர்பார்த்து முதலீடு செய்துவைத்துக் கொள்வது, எதிர்கால வாழ்க்கைக்கு நிம்மதி சேர்க்கும்.
ஓய்வு பெற்ற எனக்கு, பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு முதலீடு பற்றித் தெரியாது. என் ஓய்வூதிய பணத்தை முதலீடு செய்ய வழி சொல்லுங்கள்.
உமா, சென்னை.
பங்குகள், மியூச்சுவல் பண்டுகளுக்கு போவதற்கு முன், அஞ்சலகத்துக்கு செல்லுங்கள். மூத்த குடிமக்களுடைய தேவைகளை கருத்தில் கொண்டு, நல்ல பல திட்டங்கள் அங்கே உள்ளன. மியூச்சுவல் பண்டுகளில், ‘லார்ஜ்கேப் பண்டுகள், ஹைபிரிட் பண்டுகள்’ ஆகியவற்றில் முதலீடு செய்யுங்கள். அருகில் உள்ள பெரிய வங்கி கிளை ஏதேனும் ஒன்றுக்கு செல்லுங்கள். பல வங்கிகள் இன்று மியூச்சுவல் பண்டு வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் உங்களை முதலீடு செய்ய கைபிடித்து நடத்தி செல்வர்.
நான் அஞ்சலக காப்பீட்டு திட்டத்தில் 2011- – 12ல், ஓராண்டுக்கு 1,319 ரூபாய் மட்டுமே கட்டினேன். பொருளாதார சிரமங்களால் மீத தவணைகளைக் கட்ட முடியவில்லை. நான் கட்டிய பணத்தில் பாதித் தொகையேனும் திரும்பத் தாருங்கள் எனக் கேட்கிறேன். மூன்று ஆண்டுகளாவது பிரீமியம் கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். நான் எப்படி பணத்தைப் பெறுவது?
டி. சந்திரன், உசிலம்பட்டி
அஞ்சலகம் சொல்வது சரி தான். மூன்று ஆண்டுகளேனும் பிரீமியம் செலுத்தியிருக்க வேண்டும். உங்கள் சிரமங்களை எடுத்துச் சொல்லி, உங்கள் காப்பீட்டு விபரங்களையும் குறிப்பிட்டு, ‘போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு’ கடிதம் எழுதுங்கள். அவர் நினைத்தால் உங்களுக்கு ஏதேனும் சகாயம் செய்ய முடியும்.
கணவன், மனைவி இருவரும் கல்லுாரி பேராசிரியர்கள். இருவரும் இணைந்து வங்கியில் வீட்டுக்கடன் பெற்றுள்ளனர். அக்கடனுக்கான வட்டி ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் வருகிறது. வருமான வரி செலுத்தும்போது, ஒவ்வொருவரும் வருமானத்தில் 2 லட்சம் ரூபாய் வீதம் கழித்துக் கொள்ளலாமா? கல்லுாரி நிர்வாகம் 1 லட்சம் ரூபாயை மட்டுமே கணக்கில் கொண்டு, வரிப் பிடித்தம் மேற்கொள்கிறது.
சந்தானகிருஷ்ணன், வாட்ஸ் ஆப்.
ஒவ்வொருவரும் மொத்த வட்டியில் 50: 50 எடுத்துக்கொண்டு வரிச் சலுகை கோரலாம். வங்கியில் இணைந்து கடன் வாங்கியது மட்டுமல்ல, கணவன் -– மனைவி இருவருமே அந்த வீட்டின், ‘கோ ஓனர்கள்’ ஆக இருப்பது அவசியம். அப்போது தான், அவர்கள் இருவராலும் மொத்த வட்டியில் இருந்து விலக்கு கோர முடியும். கல்லுாரி நிர்வாகத்திடம் விபரம் சொல்லி, கூடுதலாக வரிப் பிடித்தம் மேற்கொள்ள சொல்லுங்கள்.
வாசகர்களே,
நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014
என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச்சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|