பதிவு செய்த நாள்
21 செப்2021
19:30
புதுடில்லி:சீனாவைச் சேர்ந்த, ‘எவர்கிராண்டு’ நிறுவனத்தின் நிலையை, 2008ல், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான, ‘லேமன் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் பாதிப்புடன் ஒப்பிட்டுள்ளார், ‘கோட்டக் மகிந்திரா வங்கி’யின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான உதய் கோட்டக்.
சீனாவைச் சேர்ந்த இரண்டாவது மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எவர்கிராண்டு, மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் தத்தளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இந்நிறுவனம் 22 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கி, விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டியை கட்ட, சொத்தை விற்க முயற்சி எடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை.
இதனால், இந்நிறுவனம் திவால் ஆகிவிடலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதனால் சீன பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக, உலக சந்தைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில், கடந்த 2008ம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட முக்கிய காரணமாக அமைந்த, முதலீட்டு நிறுவனமான, ‘லேமன் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் வீழ்ச்சியை, எவர்கிராண்டு நிறுவனத்துடன் ஒப்பிட்டுள்ளார், உதய்கோட்டக்.
‘சிட்டி வங்கி’ உள்ளிட்ட சில நிறுவனங்கள், லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் பாதிப்புடன் இதை ஒப்பிட முடியாது என கூறிஇருப்பினும், உதய் கோட்டக் இவ்வாறு உறுதியாக தெரிவித்துள்ளார்.மேலும், இக்கட்டுமான நிறுவனத்தின் சிக்கலை, இந்தியாவின், ஐ.எல்.எப்.எஸ்., நிறுவனத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.எல்.எப்.எஸ்., நிறுவனம், கடந்த 2018ல் நிதிச் சிக்கலில் மாட்டியது. பின் அரசு தலையிட்டு, புதிய நிர்வாக குழுவை, உதய் கோட்டக் தலைமையில் அமைத்தது. சரியான சமயத்தில் அரசு தலையிட்டதை அடுத்து, இக்குழு, 61 சதவீத மீட்பை எட்டியது. சந்தைகளிலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட, 250 நிறுவனங்களை கொண்ட, ஐ.எல்.எப்.எஸ்., குழுமத்தின் கடன் பாக்கி, 94 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல், எவர்கிராண்டு நிறுவனத்தை மீட்கும் முயற்சியில், சீன அரசு இறங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|