பதிவு செய்த நாள்
24 செப்2021
22:39
பங்கு விலை
‘ஆதித்ய பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., நிறுவனம்’ இம்மாதம் 29ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் பங்கின் விலையை 695 – 712 ரூபாயாக நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,768 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் பங்கு வெளியீடு 29ம் தேதியன்று துவங்கி, அக்டோபர் 1ம் தேதியுடன் நிறைவு பெறும்.
வரி வசூல்
நிகர நேரடி வரி வசூல், நடப்பு நிதியாண்டில் இதுவரை 74 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து, செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலத்தில், நிகர நேரடி வரி வசூல் 74.4 சதவீதம் அதிகரித்து, 5.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
கடும் போட்டி
பொதுத் துறையைச் சேர்ந்த, ‘ராஷ்ட்ரீய இஸ்பத் நிகாம்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்வது என மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.இந்நிலையில், இந்த பங்கு விலக்கல் நடவடிக்கைக்கான பரிவர்த்தனை ஆலோசகராக இருப்பதற்கு,‘எர்னஸ்ட் அண்டு யங், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்’ உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் கடும் போட்டி போடுகின்றன.
கடன் வளர்ச்சி
இம்மாதம் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீத உயர்வை கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் அதிகரித்து, 109.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும்; ‘டிபாசிட்’டுகள் 9.32 சதவீதம் அதிகரித்து, 155.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தன்அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது கூட்டம்
‘டிஷ் டிவி இந்தியா’ நிறுவனம், உடனடியாக பங்குதாரர்களின் அவசர கால பொது கூட்டத்தைக் கூட்டி, புதிய நிர்வாக குழுவை அமைக்குமாறு ‘யெஸ் பேங்க்’ கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டம், இம்மாதம் 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து, ‘டிஷ் டிவி’யின் அதிக பங்குகளை வைத்திருக்கும் யெஸ் பேங்க் இவ்வாறு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|