பதிவு செய்த நாள்
28 செப்2021
19:46
போர்டு முதலீடு
போர்டு நிறுவனம், இந்திய சந்தையிலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் மிகப் பெரிய அளவிலான முதலீட்டை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.தென் கொரியாவின், ‘எஸ்.கே. இன்னோவேஷன்’ நிறுவனத்துடன் இணைந்து, அமெரிக்காவில், கிட்டத்தட்ட 84 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
யுனிகார்ன் நிறுவனங்கள்
நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும், இந்தியாவில் 28 புதிய, ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் உருவாகி உள்ளன என்றும்; இதையடுத்து, மொத்த யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாகவும், ‘அசோசெம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், யுனிகார்ன் அந்தஸ்தை பெற்ற நிறுவனங்களாக அழைக்கப்படுவது நடைமுறை.
மீண்டும் அலுவலகம்
கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், முன்னணி நிறுவனங்கள் பல, வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை, மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்க துவங்கி உள்ளன.அந்த வரிசையில், ‘விப்ரோ, எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி, டெலாய்ட் கோட்டக் மகிந்திரா வங்கி, புராக்டர் அண்டு கேம்பிள்’ என பல நிறுவனங்கள் இணைந்துள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள், வீட்டிலிருந்து சில நாட்களும்; அலுவலகத்திலிருந்து சில நாட்களும் பணிபுரிய அறிவுறுத்தி உள்ளன.
எல்.ஐ.சி.,க்கு அதிகாரி
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முன்பாக, தலைமை நிதி அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்நிறுவனத்தில், தலைவர் பதவிக்கு பதிலாக, தலைமை செயல் அதிகாரி பதவியை கொண்டு வரும் முடிவின் தொடர்ச்சியாக, தற்போது தலைமை நிதி அதிகாரி நியமிக்கப்பட இருக்கிறார் என கூறப்படுகிறது.
பங்கு வெளியீடு
இதயத்தில் இரத்தக்குழாய் அடைப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், ‘ஸ்டென்ட்’ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘சகஜானந்த் மெடிக்கல் டெக்னாலஜிஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக இந்நிறுவனம் 1,500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இதயம் சம்பந்தமான சாதனங்களில் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|