பதிவு செய்த நாள்
03 அக்2021
18:49
‘ஷாப்பிங்’ செய்ய பண்டிகை காலம் ஏற்றது என்றாலும், நுகர்வோர் தங்கள் செலவுகள் தேவைக்கேற்ப அமைவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வர்த்தக நிறுவனங்களும், ‘பிராண்ட்’களும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் விளம்பரங்கள் மற்றும் சலுகைகளை வெளியிட்டு வருகின்றன. வங்கிகளும், ‘ரியல் எஸ்டேட்’ நிறுவனங்களும் பண்டிகை கால அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.இன்னொரு பக்கம் ‘இ – -காமர்ஸ்’ நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களும் தேவையான பொருட்களை வாங்க, பண்டிகை காலத்தை பயன்படுத்திக்கொள்ள தயாராக உள்ளனர். அண்மை ஆய்வுகளும், பெரும்பாலான நுகர்வோர் பண்டிகை காலத்தில் பொருட்களை வாங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கின்றன.
கவனம் தேவை
வாகனம் முதல், மின்னணு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல வகையான பொருட்களை வாங்க பண்டிகை காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், நுகர்வோர் தங்கள் செலவுகளை மேற்கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். குறிப்பாக கடன் வசதியில் பொருட்களை வாங்கும் போது, திட்டமிட்டு செயல்பட வேண்டும்.மிகவும் தேவையான மற்றும் ஏற்கனவே வாங்க திட்டமிட்டுள்ள பொருட்களை வாங்க, பண்டிகை காலத்தை பயன்படுத்திக் கொள்வது அதிக பலன் அளிக்கும்.
மாறாக, சலுகைகள் அல்லது தள்ளுபடியால் கவரப்பட்டு வாங்கும் போது, அது சுமையாக மாறலாம்.கடன் வசதியை நாடுபவர்கள், தாங்கள் வாங்க உள்ள பொருள், தேவையின் அடிப்படையில் அமைந்ததா அல்லது விருப்பத்தின் அடிப்படையில் அமைந்ததா என தீர்மானிக்க வேண்டும். கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், அந்த தொகை திருப்பிச் செலுத்தக்கூடியதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
துாண்டுதலின் அடிப்படையில் பொருட்களை வாங்கினால், மாதத் தவணையை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதை தவிர்க்க, பொருட்களின் தேவை மற்றும் அவற்றுக்கான பட்ஜெட்டை தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
‘டிஜிட்டல்’ கடன்
கடன் வசதியில் பொருட்களை நாடுவதாக இருந்தால், பொருத்தமான வாய்ப்பை தேர்வு செய்வது அவசியம். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசதியை அளிப்பதோடு, ‘டிஜிட்டல்’ கடன் வசதியும் எளிதாகக் கிடைக்கிறது.இது தவிர, ஆன்லைனில் பொருட்களை வாங்க, பி.என்.பி.எல்., எனப்படும் பொருட்களை வாங்கி, பின்னர் பணம் செலுத்தும் வசதியும் பல நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இவற்றில் இருந்து, நுகர்வோர் பொருத்தமானதை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடனுக்கான வட்டி மற்றும் பிற கட்டணங்களையும் மனதில் கொள்ள வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் கடன் வசதியை வழங்குவதால், அவை அளிக்கும் அம்சங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எளிதாக கிடைக்கும் கடனை நாடாமல், அதன் மூலம் சிறந்த பலனை பெற முடியுமா என்பதை ஒப்பீட்டின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் எனில், அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய வேண்டும்.
முக்கியமாக மறைமுக கட்டணங்கள் இருக்கின்றனவா என பார்க்க வேண்டும். இ – -காமர்ஸ் தளங்கள் எனில், ‘கேஷ்பேக்’ சலுகைகள் போன்றவற்றை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு திட்ட மிட்டு செயல்படுவதன் மூலம், பண்டிகை கால ஷாப்பிங் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையலாம்.எல்லாவற்றையும் விட முக்கியமாக, திட்டமிடலின் அருமையை உணர்ந்து, அடுத்த பண்டிகை கால தேவையை மனதில் கொண்டு, அதற்கான சேமிப்பை துவக்குவதும் பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் கடனில் பொருட்களை வாங்கும் நிலையை தவிர்க்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|