பதிவு செய்த நாள்
22 அக்2021
21:47
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான அடுத்த கட்ட தங்க பத்திர வெளியீடு, 25ம் தேதியன்று துவங்க இருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான அடுத்த வரிசை தங்க பத்திர வெளியீடு, நான்கு கட்டங்களாக, அக்டோபர் முதல், அடுத்த ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னதாக, கடந்த மே முதல், செப்டம்பர் வரையிலான காலத்தில், நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர வெளியீடு, 6 கட்டங்களாக நடைபெற்றது. இதையும் சேர்த்தால், நடப்பு நிதியாண்டில் மொத்தம் 10 கட்டங்களாக பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.
இதுவரை 6 கட்டங்களாக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், 7வது கட்ட வெளியீடு இம்மாதம் 25ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரை, மொத்தம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. பத்திரங்கள் நவம்பர் 2ம் தேதி வழங்கப்படும்.மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில், ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்கிறது.
விலை நிர்ணயம்
பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, 2015 நவம்பரில் தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம். ௧ கிராம் தங்கம், ௧ யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.இந்த தங்க பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 5வது ஆண்டிலிருந்து, விரும்பினால் முதலீட்டிலிருந்து வெளியேறிக் கொள்ளலாம்.
வங்கி கணக்கில் வரவு
இம்முதலீட்டுக்கு, ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எட்டு ஆண்டுகள் கழித்து, பத்திர முதிர்வின் போது கிடைக்கும் வருவாய்க்கு, மூலதன ஆதாய வரி கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.தனிநபர்கள், குறைந்தபட்சம் 1 கிராமிலிருந்து, அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம். அறக்கட்டளை போன்றவை 20 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம்.
வரும் 25ம் தேதியன்று துவங்க இருக்கும் 7வது கட்ட தங்க பத்திர வெளியீட்டை ஒட்டி, தங்கத்தின் விலை கிராமுக்கு எவ்வளவு என்பதை, விரைவில் ரிசர்வ் வங்கி அறிவிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|