பதிவு செய்த நாள்
24 அக்2021
18:57

‘மியூச்சுவல் பண்டு’களில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., வழியை நாடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, ‘மியூச்சுவல் பண்டு’கள் சிறந்த வழிகளில் ஒன்றாக அமைகின்றன என்றால், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய ஏற்ற வழிகளில் ஒன்றாக எஸ்.ஐ.பி., எனக் குறிப்பிடப்படும், ‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ அமைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மியூச்சுவல் பண்டு திட்டங்களில், சீரான இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., வழி செய்கிறது.
சந்தையின் ஏற்ற இறக்கத்தை மீறி, நீண்ட கால நோக்கில் பலன் பெற எஸ்.ஐ.பி., முதலீடு வழி செய்கிறது. சம பங்கு நிதிகள், கடன்சார் நிதிகள் உள்ளிட்ட திட்டங்களில் இந்த முறையில் முதலீடு செய்யலாம்.
நிதி இலக்குகள்
எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யும் போது, முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் முதலீட்டிற்கான நிதி இலக்காகும். குறுகிய கால நோக்கிலானதா அல்லது நீண்ட கால நோக்கிலானதா என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப திட்டமிடுவதன் மூலம், முதலீட்டிற்கான கால அவகாசத்தை தீர்மானித்துக் கொள்ளலாம். சரியான நிதியை தேர்வு செய்யவும் இது உதவும். அதே போல, முதலீட்டிற்கான தொகையையும் சரியாக தீர்மானிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 500 ரூபாய் கூட முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும், குறைந்த தொகையை மட்டும் முதலீடு செய்வது, நிதி இலக்கை அடைய போதுமானதாக இருக்காது.
எனவே, ஒருவர் தன் நிதி நிலைக்கு ஏற்ப சரியான தொகையை முதலீடு செய்வது அவசியம். அதே போல, ஆரம்பத்தில் அதிக தொகையை முதலீடு செய்துவிட்டு, அதை தொடர முடியாமல் அவதிப்படுவதையும் தவிர்க்க வேண்டும். எஸ்.ஐ.பி., முதலீட்டை குறிப்பிட்ட காலத்தில் உயர்த்திக் கொள்வதற்கான ‘டாப் அப்’ வசதி மூலம், மாதாந்திர தொகையை அதிகமாக்கும் யுக்தியையும் பின்பற்றலாம். இதன் மூலம் நிதி இலக்கை எளிதாக அடையலாம் என்பதோடு, வருமானம் உயர்வதற்கு ஏற்ப முதலீட்டையும் அதிகமாக்கலாம்.
தனித்தனி நிதிகள்
நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்வது போலவே, ஒவ்வொரு இலக்கிற்கும் ஏற்ப தனித்தனி நிதியில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக குழந்தைகள் கல்வி, ஓய்வு காலம், விடுமுறை பயணம் போன்ற இலக்குகளுக்கு ஏற்ப நிதிகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட ஒவ்வொரு இலக்கிற்காக தொகையை ஒதுக்கீடு செய்ய முடிவதோடு, முதலீடு பரவலாக்கம் சாத்தியமாகவும் இது கைகொடுக்கும்.
இடர் தன்மை உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு நிதிகளை தேர்வு செய்து பரவலாக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.எஸ்.ஐ.பி., முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளும் வசதி இருந்தாலும், இலக்கு களை அடையும் வரை முதலீட்டை தொடர்வதே சரியாக இருக்கும். சந்தை சரிவு போன்ற காரணங்களால் பீதி அடைந்து, முதலீட்டை நிறுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஏற்ற, இறக்கங்களை மீறி, குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், சந்தை சரியும் காலத்தில் அதிக யூனிட்களை வாங்குவது சாத்தியமாகும். எனவே, இலக்குகளை அடையும் போது மட்டுமே முதலீட்டை விலக்கிக் கொள்ள வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது, முதலீட்டின் செயல்பாட்டை மறக்காமல் ஆய்வு செய்ய வேண்டும். முதலீடு சரியான பாதையில் செல்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள ஆய்வு உதவும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|