பதிவு செய்த நாள்
27 அக்2021
20:16
10 கோடி பயனாளர்கள்
நம் நாட்டில், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும், ‘ஸ்னாப்சாட்’ செயலியை, எண்ணற்ற மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டு, ஸ்னாப்சாட் இணை நிறுவனரான இவான் ஸ்பீகல் கூறுகையில், “இது ஒரு பெருமைக்குரிய நிகழ்வாகும். இதை மேலும் விரிவுபடுத்த தொடர்ந்து முயற்சிப்போம்,” என்றார்.
பங்குகளை வாங்கும் ‘ரிலையன்ஸ்’
நம் நாட்டில் செயல்பட்டு வரும், ‘ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் லிமிடெட்’ என்ற கட்டுமான பொறியியல் நிறுவனம், தன் 25.9 சதவீத பங்குகளை, ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்திற்கு விற்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தின், 4.91 கோடி பங்குகளை 1,840 கோடி ரூபாய்க்கு வாங்க, ரிலையன்ஸ் குழும நிறுவனமான, ‘ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார்’ நிறுவனம் முன்வந்துள்ளது.
‘மஹிந்திரா’ நிறுவனம் ஒப்பந்தம்
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் குடியிருப்பு கட்டடங்களை அமைத்துக் கொடுக்க, ‘மஹிந்திரா லைப்ஸ்பேஸ்’ நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகையில், “குடியிருப்பு வணிகத்தில் வளர்ச்சியை காணும் சந்தையாக மும்பை மாநகராட்சி உள்ளது. இதனால் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்,” என்றார்.
நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்பு
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனராக அஷ்வணி குமார் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன், ‘பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ்’ உள்ளிட்ட வங்கிகளிலும் இவர் பணியாற்றி உள்ளார்.
விரிவாக்கம் செய்ய திட்டம்
நம் நாட்டில், ஊட்டச்சத்து துறையில் முன்னணியில் இருக்க, ‘டானோன் இந்தியா’ நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ‘ஆப்டாக்ரோ’ என்ற, பாலில் கலந்து குடிக்கும் குழந்தைகளுக்கான பவுடரை, இந்த நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது. அப்போது பேசிய நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன், “எங்கள் நிறுவன பொருட்களை நாடு முழுதும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|